பாம்பன் புதிய ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். தொடர்ந்து, ரூ.8,300 கோடி மதிப்பில் பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதற்காக ராமநவமி நாளான இன்று (ஏப். 6) பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வருகிறார். இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு இன்று காலை மண்டபம் ஹெலிபேட் தளத்துக்கு பகல் 11.45 மணிக்கு வருகிறார். அங்கிருந்து கார் மூலம் பாம்பன் சாலைப் பாலத்தில் அமைக்கப்பட்டிருக்கும் மேடைக்குச் செல்கிறார். பகல் 12 மணியளவில் பாம்பன் புதிய ரயில் பாலத்தை திறந்து வைப்பதுடன், ராமேசுவரம்-தாம்பரம் இடையிலான புதிய ரயில் சேவையையும் தொடங்கிவைக்கிறார். பின்னர் செங்குத்து தூக்குப் பாலம் தூக்கப்பட்டு, கடலோரக் காவல் படைக்கு சொந்தமான கப்பல் பாம்பன் புதிய பாலத்தை கடந்து செல்வதை பிரதமர் பார்வையிடுகிறார்.