
லாகூர்,
அண்மையில் முடிவடைந்த 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. பாதுகாப்பு பிரச்சினை காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தான் செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் அனைத்தும் துபாயில் நடைபெற்றது. இதில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்தியா தோல்வியே சந்திக்காமல் கோப்பையை கைப்பற்றியது.
இந்த தொடரில் நடப்பு சாம்பியனாக களமிறங்கிய பாகிஸ்தான் அணி ஒரு வெற்றி கூட பெறாமல் தனது பிரிவில் (ஏ பிரிவு) கடைசி இடம் பிடித்து பரிதாபமாக வெளியேறியது. இந்த தோல்விக்கு அந்த அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பாபர் அசாம் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். சமீப காலமாகவே சுமாரன பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் சாம்பியன்ஸ் டிராபியிலும் சொதப்பினார். இதனால் எதிர்வரும் நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் விராட் கோலி சுமாராக செயல்பட்ட காலங்களில் இந்தியா ஆதரவளித்ததாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் சயீத் அஜ்மல் தெரிவித்துள்ளார். ஆனால் பாகிஸ்தான் நிர்வாகம் பாபரை அணியில் இருந்து நீக்கியது சரியல்ல என்றும் அவர் விளாசியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "விராட் கோலிக்கு இந்தியா எப்படி ஆதரவு கொடுத்தார்கள் என்பதைப் பாருங்கள். விராட் கோலி தடுமாறிய போதும் அவரை யாருமே அணியிலிருந்து நீக்கவில்லை. பாபர் அசாம் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மிகப்பெரிய நட்சத்திரம். அப்படி இருந்தும் சுமாராக விளையாடும் அவரை அணியிலிருந்து வெளியேற்றுவதில் அனைவரும் குறியாக இருக்கின்றனர். உங்களிடம் ஒரே ஒரு நட்சத்திரம் மட்டுமே இருக்கிறார்.
அவரையும் நீங்கள் இப்படி தள்ளினால் எப்படி நம்முடைய கிரிக்கெட் தாக்குப் பிடிக்கும்? இது மிகப்பெரிய பிரச்சினை. நமது முன்னாள் வீரர்கள் விமர்சிக்காமல் தங்களுடைய வாயை மூடிக்கொள்ள வேண்டும். கிரிக்கெட்டில் விளையாடும் வீரர்கள் மோசமான காலங்களை சந்திப்பது சகஜம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை முழுவதும் உங்களால் ஒரே மாதிரியான கிரிக்கெட்டை விளையாட முடியாது
சச்சினால் கூட அனைத்து போட்டிகளிலும் சதத்தை அடிக்க முடியாது. அவரும் டக் அவுட்டாவார். உலகத்தரம் வாய்ந்த வீரரான அவரும் இது போன்ற மோசமான காலங்களை சந்தித்துள்ளார். எனவே நீங்கள் கொஞ்சம் பொறுமையாக இருந்து தடுமாற்றமாக விளையாடும் வீரர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும். பாபர் நம்பர் 1 வீரராக இருக்கும்போது ஆதரவு தேவையில்லை. ஆனால் தடுமாறும்போது ஆதரவு அவசியம்" என்று கூறினார்.