பாஜகவை வீழ்த்த வேண்டுமானால் இந்தியா கூட்டணியை பலப்படுத்த வேண்டும்: காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து

3 weeks ago 5

புதுடெல்லி: பாஜகவை வீழ்த்த வேண்டுமானால் இந்தியா கூட்டணியை பலப்படுத்த வேண்டும் என்று ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் மற்றும் மிருதுஞ்ஜய் சிங் யாதவ் ஆகியோர் எழுதிய புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் பேசுகையில், ‘இந்தியா கூட்டணி கட்சிகள் இன்னும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் இருக்கிறதா என்பது குறித்து எனக்கு உறுதியாக தெரியவில்லை. ஆனால் பாஜக வலிமையான கட்சியாக இருக்கிறது.

அந்த கட்சியை எதிர்கொள்ள, இந்தியா கூட்டணி தொடர்ந்து வலிமையுடன் பராமரிக்கப்பட வேண்டும். கூட்டணிகள் குறித்து எனக்கு மிகவும் மாறுபட்ட பார்வை உள்ளது. தமிழ்நாட்டில் கூட்டணி குறித்த நீண்ட அனுபவங்கள் எனக்கு உண்டு. தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைக்க முடியாது. கூட்டணிகளை ஐந்து ஆண்டுகள் ெதாடர்ந்து பராமரிக்க வேண்டும். அந்த வகையில் தோல்வி மற்றும் வெற்றியின் மூலம் வளர்ந்த கூட்டணிகள் கேரளா மற்றும் தமிழ்நாட்டில் மட்டுமே உள்ளன. வரும் 2029ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல்களுக்கு முன்னர், இந்தியா கூட்டணியை ஒருங்கிணைக்க நேரம் இருக்கிறது. ஆனால் அதற்கு கடுமையான முயற்சிகள் தேவை. எனது அனுபவத்திலும், கடந்தகால வரலாற்று புரிதலிலும், பாஜகவைப் போல வலுவாக ஒருங்கிணைக்கப்பட்ட அரசியல் கட்சி எதுவும் இல்லை.

எனவே இந்தியா கூட்டணியை பலப்படுத்துவது 2029ம் ஆண்டு நடைபெறும் தேர்தல்களில் முக்கியமானதாக இருக்கும். இல்லையெனில் பாஜகவின் ஆதிக்கம் மேலும் வலுப்பெற வாய்ப்புள்ளது’ என்று கூறினார். ப.சிதம்பரத்தின் கருத்துக்கள், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை குறித்து முக்கிய விவாதத்தை எழுப்பியுள்ளன. சமூக ஊடகங்களிலும் இதுகுறித்து விவாதங்கள் எழுந்துள்ளன. அதில் பலர் ப.சிதம்பரத்தின் கவலைகளை ஆமோதித்து கருத்துகளை கூறியுள்ளனர். மேலும், பாஜகவுக்கு எதிராக இந்தியா கூட்டணியை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி அவர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

The post பாஜகவை வீழ்த்த வேண்டுமானால் இந்தியா கூட்டணியை பலப்படுத்த வேண்டும்: காங். மூத்த தலைவர் ப.சிதம்பரம் கருத்து appeared first on Dinakaran.

Read Entire Article