பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ள நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி

1 month ago 9

சேத்தியாத்தோப்பு, மே 25: வரத்து அதிகரிப்பால் வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது குறுவை சாகுபடிக்கு உகந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். கடலூர் மாவட்டத்தில் பெரிய நீராதாரமாக உள்ள வீராணம் ஏரி காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் உள்ளது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரியில் இருந்து விஎன்எஸ்எஸ் மதகு வழியாக சேத்தியாத்தோப்பு பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு விவசாய பாசனத்திற்கு ஏரி நீர் திறந்துவிடப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக கோடை வெப்பத்தின் காரணமாகவும், ஏரிக்கு நீர்வரத்து இல்லாத நிலையிலும் ஏரியில் நீர் வேகமாக குறைந்தது. இந்நிலையில் சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பல்வேறு வடிகால் வாய்க்கால் வழியாக ஏரிக்கு தண்ணீர் வரத்து வந்தது. இதனால் தற்போது ஏரியின் நீர்மட்டம் 45.45 அடியாக உள்ளது.

ஏரியின் மொத்த நீர் இருப்பு 1465 மில்லியன் கன அடியில், தற்போது 968 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர் வரத்து 1066 கன அடியாக உள்ளது. இதில் சென்னை குடிநீருக்காக 74 கன அடி தண்ணீர் தினமும் ராட்சத குழாய்கள் மூலம் அனுப்பப்படுகிறது. நீர்வரத்தால் ஏரியின் நீர்மட்டம் அதிகரித்து வருவது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருவதோடு, குறுவை சாகுபடிக்கு போதுமான தண்ணீர் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதனிடையே வழக்கமாக ஜூன் மாதத்தில் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படும் வீராணம் ஏரியில், மழையின் காரணமாக தற்போது நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதே ேவளையில், வீராணம் ஏரியின் அனைத்து பாசன வாய்க்கால்களையும் தூர்வார வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

The post பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உள்ள நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் அதிகரிப்பு விவசாயிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article