
சண்டிகர்,
பஞ்சாப் மாநிலத்தில் போதைப்பொருள் புழக்கத்தை தடுக்க மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், அம்மாநிலத்தின் தரண் தரண் சாகிப் மாவட்டம் நவ்ஷிரா பகுதியை சேர்ந்த நபர், பாகிஸ்தானை சேர்ந்த போதைப்பொருள் கடத்த கும்பலுடன் தொடர்பில் இருப்பதாக மாநில உளவு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் ஜோக்பீர் சிங் என்பவரை உளவு பிரிவு போலீசார் இன்று கைது செய்தனர். ஜோக்பீர் சிங்கிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் பாகிஸ்தானை சேர்ந்த போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்தது உறுதியானது.
மேலும், ஜோக்பீர் சிங்கிடமிருந்து 5 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த துப்பாக்கிகள் பாகிஸ்தானில் இருந்து சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் கடத்தி வரப்பட்டுள்ளது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஜோக்பீர் சிங்கிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.