
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் குடுபு கிராமத்தில் கடந்த 27ம் தேதி உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில், அப்பகுதியை சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
ஆட்டத்தின்போது மைதானத்தில் ஒருநபர் 'பாகிஸ்தான் வாழ்க' என கோஷம் எழுப்பினார். இதனால் ஆத்திரமடைந்த அங்கிருந்தவர்கள் அந்த நபர் மீது சரமாரி தாக்குதல் நடத்தினர். கற்கள், கட்டைகளை கொண்டு அந்த நபரை சரமாரியாக அடித்தனர். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சச்சின் என்ற நபர் உள்பட 20 பேரை கைது செய்தனர். மேலும், 10 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். தாக்குதலில் உயிரிழந்தது கேரள மாநிலம் வயநாடு மாவட்டம் புல்பல்லி கிராமத்தை சேர்ந்த அஷ்ரப் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தான் வாழ்க என்று கோஷம் எழுப்பிய நபர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையாவிடம் இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த சித்தராமையா கூறுகையில்,
குடுபு கிராமத்தில் நபர் அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் வாழ்க என கோஷம் எழுப்பப்பட்டிருந்தால் யாராக இருந்தாலும் அது மிகவும் தவறான ஒன்று. பாகிஸ்தானுக்கு ஆதரவாக யார் பேசினாலும் தவறு. அவ்வாறு பேசுவது தேச துரோகத்திற்கு சமம்' என்றார்.