
சென்னை,
'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் மரணமடைந்ததற்கு இயக்குனர் மாரி செல்வராக் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் பகிர்ந்துள்ள பதிவில்,
''ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் அண்ணன் மரணம் என்ற செய்தி இதயத்தில் அதிர்ச்சியையும் வேதனையையும் நிரப்புகிறது. வாழை இறுதிகாட்சியில் நீங்கள் அந்த லாரியை துணிச்சலாக கவிழ்த்து எல்லாரையும் கலங்கடித்த நாட்களை நெஞ்சு படபடக்க இன்று நினைத்துகொள்கிறேன். நீங்களும் உங்களின் துணிச்சலும் என்றும் நினைவில் இருப்பீர்கள் அண்ணா'' இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.
இயக்குனர் பா.ரஞ்சித் தற்போது 'வேட்டுவம்' படத்தை இயக்கி வருகிறார். நீலம் புரொடக்சன் தயாரிக்கும் இந்த படத்தில் ஆர்யா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் பல இடங்களில் மும்முரமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் கடந்த 10-ந் தேதி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் அமைந்துள்ள அளப்பகுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் மோகன்ராஜ் என்பவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில், படப்பிடிப்பின்போது ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜ் உயிரிழந்தார்.