பா.ம.க. பொறுப்பாளர்களை 2-வது நாளாக சந்தித்து ஆலோசனை நடத்துகிறார் அன்புமணி ராமதாஸ்

1 day ago 2

பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும், அவருடைய மகனும் கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாசுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இதனிடையே திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் ராமதாஸ் நேற்று முன்தினம் பேட்டியளித்தார். அப்போது அவர் அன்புமணிக்கு எதிராக அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

இதனிடையே கட்சி தலைவரான அன்புமணி, சென்னை சோழிங்கநல்லூரில் பா.ம.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், மே 31-ந்தேதி முதல் (அதாவது நேற்று முதல்) 3 நாட்கள் நடக்கும் என்று அறிவித்தார். இந்த நிலையில் நேற்று காலையில் ராமதாசை கட்சியின் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் தீரன், அருள் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர்.

இதையடுத்து பா.ம.க. பொருளாளர் திலகபாமாவை அப்பொறுப்பில் இருந்து நீக்கி அவருக்கு பதில் சையத் மன்சூர் உசேன் என்பவரை நியமித்து ராமதாஸ் உத்தரவிட்டார். தொடர்ந்து பல்வேறு மாவட்ட தலைவர்களை மாற்றி அறிவிப்பு வெளியிட்டார்.

இந்த பரபரப்பான சூழலில் சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள மகாராஜா மகாலில், அன்புமணி ராமதாஸ் தலைமையில், பா.ம.க. மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் அடங்கிய முதல் நாள் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. காலை நடைபெற்ற கூட்டத்தில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய 6 மாவட்டத்தை சேர்ந்த 22 மாவட்ட செயலாளர்கள் பங்கேற்றனர். மாலையில் திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பா.ம.க. பொருளாளர் திலகபாமா, செய்தித் தொடர்பாளர் வக்கீல் பாலு உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், பா.ம.க.வின் புதுப்பித்த உறுப்பினர் அட்டையை, மாவட்ட நிர்வாகிகள் அன்புமணி ராமதாசுக்கு வழங்கினர். உறுப்பினர் அட்டையில் டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி ராமதாஸ் உருவப்படங்கள் இடம் பெற்றுள்ளன. முன்னதாக டாக்டர் ராமதாசால் நீக்கப்பட்ட மாநில பொருளாளர் திகலகபாமாவுக்கு மீண்டும் அதே பதவியை அன்புமணி வழங்கினார். மற்றவர்களும் நீடிப்பதாக கூறினார்.

தொடர்ந்து கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், "தற்போது, சில குழப்பங்கள் நீடித்து வருகிறது. அது சரியாகிவிடும், அதை சரி செய்துவிடுவேன். பா.ம.க. பொருளாளர் திலகபாமாவை நீக்கம் செய்து அவருக்கு மாற்றாக ஒரு அறிவிப்பு வருகிறது. அடுத்த 10 நிமிடத்தில் நான் ஒரு கடிதம் கொடுத்துவிட்டேன். திலகபாமா பொருளாளராக தொடர்வார் என அறிவித்துவிட்டேன். அவரை நீக்க எனக்கும், வேறு யாருக்கும் அதிகாரம் இல்லை. பொதுக்குழுவால் தேர்ந்தெடுத்த உங்களுக்கே அதிகாரம்.

இதுதான் கட்சியின் சட்ட விதி. இந்த விதிகள் தேர்தல் கமிஷனில் உள்ளது. அதேபோல் மாவட்ட செயலாளர்களையும் யாராலும் மாற்ற முடியாது. பொதுக்குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட கட்சி தலைவர்தான் மாற்ற முடியும். என்னுடைய கடிதம்தான் செல்லும்" என்று கூறினார்.

இந்த நிலையில் 2-வது நாளாக இன்றும் காலை, மாலை என இரு வேளைகளிலும், நாளையும் மாவட்ட செயலாளர்களை அன்புமணி ராமதாஸ் சந்திக்கிறார். இன்று காலையில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கள்ளக்குறிச்சி மாவட்ட பொறுப்பாளர்களையும், மாலையில் அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களையும் சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.

Read Entire Article