
சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்க பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, சென்னை வந்துள்ளார்.
நேற்று இரவு சென்னை வந்த அவரை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பலர் வரவேற்றனர்.
இந்நிலையில் சென்னையில் பாஜக நிர்வாகிகளுடன், தேசிய தலைவர் ஜே.பி.நட்டா ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. காட்டாங்குளத்தூரில் உள்ள தனியார் ஹோட்டலில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றதாகவும், அதில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி உருவானதைத் தொடா்ந்து கூட்டணியை விரிவாக்கம் செய்து பலப்படுத்துதல், கூட்டணி கட்சி நிா்வாகிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாகவும், பா.ஜ.க.வினர் மற்றும் கூட்டணிக் கட்சிகளை அரவணைத்துச் செல்வது தொடா்பாக ஆலோசனை நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஜே .பி நட்டாவின் வருகையை முன்னிட்டு பாஜகவின் முக்கிய நிா்வாகிகள் சென்னையில் தங்கி இருக்க வேண்டும் என தமிழக பாஜக தலைமை அறிவுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.