வேண்டுதலை நிறைவேற்றும் திருவட்டாறு ஜடாதீஸ்வரர்

7 hours ago 1

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறில் உள்ளது, ஜடாதீஸ்வரர் திருக்கோவில். கருங்கல்லால் ஆன இந்தக் கோவிலில் அமைந்துள்ள சிவலிங்கம் பரசுராமரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.

தல புராணம்

திருவட்டாறின் ஒரு பகுதியாக விளங்கிய இன்றைய நீலகேசியம்மன் கோவில் கொண்டுள்ள இட்டகவேலி அருகே, பச்சை வயல் வெளிகளில் கதிர் விளையும் காலங்களில் பெரும் நெருப்பு தோன்றி ஊருக்கு பேரழிவு ஏற்பட்டது. ஊரை அழிவிலிருந்து மீட்டெடுக்க மக்கள் ஜோதிடர்களை நாடியுள்ளனர்.

'ஜடாதீஸ்வரர் கால பூஜைகள் இன்றி அகோர மூர்த்தியாய்க் காணப்படுகிறார். அதனால் கோவிலுக்கு அன்றாடம் பூஜை வழிபாடுகள் நடத்தவேண்டும். அவ்வாறு செய்தால் ஊரில் ஏற்படும் அழிவுகள் நீங்கி பெருஞ்செல்வம் பெற்று செழிப்புறும்' என்று ஜோதிடர்கள் கூறியுள்ளனர். அதைக் கேட்ட ஆலய பக்தர்கள் அவ்வாறே ஜடாதீஸ்வரரை வணங்கி தினசரி பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றனர்.

பரசுராமர் மழு எறிந்து கேரளத்தை தோற்றுவித்து, 108 சிவாலயங்களை பிரதிஷ்டை செய்தார். அந்த 108 சிவாலயங்களில் திருவட்டாறு தளியல் ஜடாதீஸ்வரர் கோவிலும் ஒன்று என்கிறார்கள்.

கோவில் அமைப்பு

முன்மண்டபம், உள்பிரகாரம், கருவறை என்னும் 3 அமைப்புகளை கொண்டுள்ளது இந்த கோவில். கிழக்கு நோக்கிய இந்தக் கோவிலின் முன் மண்டபத்துக்கு, தெற்கிலும், வடக்கிலும் வாசல்கள் உள்ளன. கருவறையில் லிங்க ரூபத்தில் சிவபெருமான் காட்சியளிக்கிறார்.

இந்த லிங்கமும், ஆவுடையும் உயரமானதாகவும், அகலமானதாகவும், காட்சி தருகிறது. கருவறையின் எதிரே முன் மண்டபத்தில் நந்தி காலை மடக்கி அழகுற காட்சியளிக்கிறது. கன்னி மூலையில் கணபதிக்கு தனிச்சன்னிதி உள்ளது.

கோவிலின் வெளிப்புற சுவரில் ராமேஸ்வரத்தில் சேது பாலம் கட்ட ராமனுக்கு அணில் உதவியதைக் குறிக்கும் ராமர், அணில் மற்றும் லிங்க சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. மேலும் கங்காளநாதர், பிரம்மா, சாஸ்தா, தட்சிணாமூர்த்தி, சூரியன் ஆகியோரின் புடைப்புச் சிற்பங்களும் காணப்படுகின்றன.

வழிபாடுகள்

ஜடாதீஸ்வரர் கோவில், திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலோடு தொடர்புடையது ஆகும். வருடத்திற்கு இரண்டு முறை அதாவது பங்குனி, ஐப்பசி மாதங்களில் 10 நாட்கள் ஆதி கேசவப் பெருமாள் கோவிலில் திருவிழா நடைபெறும். 9-வது நாள் ஆதிகேசவப் பெருமாள், பள்ளி வேட்டைக்கு இந்த ஜடாதீஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளுகிறார்.

இங்குள்ள சிவனை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை மக்களிடையே உள்ளது. மாதம் இருமுறை புஷ்பாபிஷேகத்துடன் கூடிய 21 அபிஷேகங்களுடன் பிரதோஷ பூஜை நடைபெறுகிறது. அனைத்து பிரதோஷ நாட்களிலும் காலை கணபதி ஹோமமும், தொடர்ந்து மிருத்துஞ்சய ஹோமமும் நடைபெறும்.

வைகாசி விசாக நாளில் குமாரகோவிலுக்கு பக்தர்கள் காவடி எடுத்துச் செல்கிறார்கள். மேலும் மார்கழி திருவாதிரை, மாசிமாத சிவராத்திரி விழா ஆகியன சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சிவராத்திரி நாளில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சிவபெருமான் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெறும்.

இந்தக் கோவில், காலை 5.30 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்திருக்கும்.

அமைவிடம்

கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு பஸ் நிலையத்தில் இருந்து பரளியாற்றுக்குச் செல்லும் வழியில் நடந்து சென்றால் ஐந்து நிமிடத்தில் கோவிலை அடையலாம்.

Read Entire Article