வாஷிங்டன்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் உரிய தீர்வு காண வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் விரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் மீது தீ 26 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து தீவிரவாதத்துக்கு ஆதரவு அளிக்கும் பாகிஸ்தான் மீது என இந்தியா கூறியது. மேலும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தத்தை நிறுத்துவது உள்ளிட்ட 5 முக்கிய முடிவுகளை இந்திய அரசு எடுத்தது. இதற்கு பதில் நடவடிக்கைகளை பாகிஸ்தான் அரசும் மேற்கொண்டது. இந்தியாவுடன் வர்த்தக ரீதியான உறவை பாகிஸ்தான் அரசு முறித்துக் கொண்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதல் காரணமாக இரு நாடுகளை சேர்ந்த அரசியல் கட்சி பிரமுகர்கள், ஆட்சியாளர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர். இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்துவோம் என பாகிஸ்தான் நாட்டு அமைச்சர் ஹனிப் அப்பாஸி வெளிப்படையாக மிரட்டல் விடுத்துள்ளார். இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களின் விசா காலாவதியான காரணத்தால் அவர்கள் எல்லோரும் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் நாடு திரும்பி வருகின்றனர். மறுபக்கம் ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இச்சம்பவம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான சூழலை அமெரிக்கா கவனித்து வருகிறது மற்றும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டு அரசுடன் நாங்கள் தொடர்பில் இருக்கிறோம். இந்தியா – பாகிஸ்தான் இடையே உரிய தீர்வு காண வேண்டும் என்று அமெரிக்கா ஊக்குவிக்கிறது. அதே நேரத்தில் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலை அமெரிக்கா வன்மையாக கண்டிக்கிறது. இந்த விஷயத்தில் நாங்கள் இந்தியாவின் பக்கம் நிற்கிறோம் என அமெரிக்க அரசு துறையின் செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ் கூறியுள்ளார்.
மேலும் இந்திய அரசும், பாகிஸ்தான் அரசும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று ஐநா வேண்டுகோள் விடுத்திருந்தார். இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலாளர் சார்பில் பேசிய ஸ்டீபன் டுஜாரிக் கூறுகையில்,’ ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் எந்த நேரடித் தொடர்பையும் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளிடம் இதுவரை வைக்கவில்லை. ஆனால் அவர் நிலைமையை மிக நெருக்கமாகவும் மிகுந்த அக்கறையுடனும் கண்காணித்து வருகிறார் என்பதை நான் உங்களுக்குச் சொல்ல முடியும். காஷ்மீரில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு நாங்கள் மிகவும் தெளிவாகக் கண்டனம் தெரிவித்தோம்.
இதில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டனர். இருப்பினும் அதிகபட்ச நிதானத்தைக் கடைப்பிடிக்கவும், நிலைமை மேலும் மோசமடையாமல் பார்த்துக் கொள்ளவும் பாகிஸ்தான் அரசாங்கத்துக்கும் இந்திய அரசாங்கத்துக்கும் நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான எந்தவொரு பிரச்சினையும், அர்த்தமுள்ள, பரஸ்பர ஈடுபாட்டின் மூலம் அமைதியாக தீர்க்க முடியும் என்றும், தீர்க்கப்பட வேண்டும் என்றும் நாங்கள் நம்புகிறோம்’ என்று தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் ஆகியோரும் பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். தீவிரவாதத்தை அழிக்க இந்தியா மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா எந்த வகையிலும் தடையாக இருக்காது என கூறியுள்ளது. காஷ்மீர் பகுதியை இந்தியா மற்றும் பாகிஸ்தான் சொந்தம் கொண்டாடுகிறது. இதில் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதி பாகிஸ்தான் வசம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் அவர்களது கற்பனைக்கும் எட்டாத வகையில் தண்டிக்கப்படுவார்கள் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்த குற்றச்சாட்டை இந்தியா நீண்டகாலமாக கொண்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பில் இந்த பிரச்சினை சார்ந்து பல்வேறு காலகட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். எனவே அமெரிக்கா இதில் அமைதி காக்கும் என நம்புகிறேன் என அமெரிக்காவிற்கான முன்னாள் பாகிஸ்தான் தூதர் ஹுசைன் ஹக்கானி தெரிவித்துள்ளார். இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா இடையூறாக நிற்காது. தீவிரவாத எதிர்ப்பு என்ற காரணத்தால் இந்த நிலைப்பாட்டை அமெரிக்கா எடுக்கும். அது பாகிஸ்தானுக்கு சங்கடம் தரும் என எழுத்தாளர் மைக்கேல் குகல்மேன் கூறியுள்ளார்.
The post பஹல்காம் தீவிரவாத தாக்குதலால் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றம்: தீர்வு காண அமெரிக்கா வலியுறுத்தல் appeared first on Dinakaran.