
ஸ்ரீநகர்,
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த 23-ந் தேதி முதல் மந்திரி உமர் அப்துல்லா தலைமையில் மந்திரி சபைக் கூட்டம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, சிறப்பு சட்டசபையைக் கூட்டுவதற்கு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச அரசு, துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹாவுக்குப் பரிந்துரைத்தது.
இதன்படி இன்று சட்டசபை சிறப்புக்கூட்டம் கூடியது. சபை கூடியதும், பஹல்காம் படுகொலைகள் தொடர்பாக கண்டனம் தெரிவித்து தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்த தீர்மானம் மீது ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேச எம்.எல்.ஏக்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர். இதனைத் தொடர்ந்து பஹல்காம் படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம், ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில், அவை உறுப்பினர்கள் ஏப்.22-ம் தேதி பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினர்.