
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அடுக்கம் கிராமத்தில் இன்று காலை பாண்டிச்சேரியில் இருந்து கண்டாச்சிபுரம் வழியாக திருவண்ணாமலை நோக்கி சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதேபோல் திருவண்ணாமலையில் இருந்து அரசு பஸ் ஒன்றும் கண்டாச்சிபுரம் நோக்கி வந்துகொண்டிருந்தது.
இந்த நிலையில் அடுக்கம் வளைவுப் பகுதியில் பஸ்சும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சரக்கு வாகன டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார். பஸ் மோதியதில் வாகனத்தின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.
விபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் ஜேசிபி எந்திரம் மூலம் இரண்டு வாகனத்தையும் அப்புறப்படுத்தி வாகனத்தில் சிக்கி இருந்த டிரைவர் முருகானந்தத்தை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த கண்டாச்சிபுரம் போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.