சத்தியமங்கலம், பிப்.17: பவானிசாகர் அணையின் கரையோர பகுதியில் காட்டு யானைகள் முகாமிட்டதால் நீர் வளத்துறை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். பவானிசாகர் அணையை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் காட்டு யானைகள் குடிநீர் மற்றும் தீவனம் தேடி பவானிசாகர் அணை பகுதிக்கு படையெடுக்கின்றன. இந்நிலையில், நேற்று மாலை வனப்பகுதியை விட்டு வெளியேறிய 5 காட்டு யானைகள் பவானிசாகர் அணையின் கரையை ஒட்டி அமைந்துள்ள புல்வெளிகளில் நடமாடியபடி தீவனத்தை உட்கொண்டன.
இதன் காரணமாக அணையின் மேல் பகுதிக்கு பணிக்கு செல்வதற்காக அவ்வழியே இருசக்கர வாகனங்களில் சென்ற நீர் வளத்துறை ஊழியர்கள் காட்டு யானைகள் நடமாட்டத்தைக் கண்டு அச்சமடைந்தனர். இதைத்தொடர்ந்து நீர் வளத்துறை ஊழியர்கள் பட்டாசுகளை வெடித்து காட்டு யானைகளை விரட்டி அடிக்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். தொடர்ந்து ஊழியர்கள் அணையின் மேல் பகுதிக்கு சென்றனர். அணையின் கரையில் பகல் நேரங்களில் காட்டு யானைகள் நடமாடுவதால் ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் மேய்ச்சலுக்கு செல்வோர் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
The post பவானிசாகர் அணை கரையில் முகாமிட்ட காட்டு யானைகள் appeared first on Dinakaran.