
திண்டுக்கல்,
பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடக்கிறது. இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா கடந்த 5ஆம் தேதி பழனி திருஆவினன்குடி கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனி முருகன் கோவிலுக்கு வருகின்றனர்.
பழனி முருகன் கோவிலை பொறுத்தவரை தைப்பூசம், வைகாசி விசாகம் உள்ளிட்ட திருவிழா தேரோட்டம் பெரியநாயகி அம்மன் கோவிலை சுற்றி உள்ள ரதவீதிகளில் நடக்கும். ஆனால் பங்குனி உத்திர தேரோட்டம் மட்டுமே பழனி மலையை சுற்றி உள்ள கிரிவீதிகளில் நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா தேரோட்டம் 11-ந்தேதி (வௌ்ளிக்கிழமை) நடக்கிறது. அப்போது ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை இழுத்து வழிபடுவார்கள். எனவே தேரோட்டத்துக்காக வடக்கு கிரிவீதியில் உள்ள தேரை கோவில் ஊழியர்கள் சீரமைத்து தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் கிரிவீதிகளில் தேர் செல்வதற்கு இடையூறாக உள்ள மரக்கிளைகள் வெட்டி அகற்றும் பணியும் நடந்து வருகிறது.