விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மனைவி வித்யா (24). பழங்குடி இருளர் சமூகத்தை சார்ந்த இவர், 10 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றுள்ளார். இளம்வயது திருமணம், குழந்தை பராமரிப்பு காரணமாக உயர்கல்வி செல்ல முடியாமல் தடை ஏற்பட்டது. இந்நிலையில் தற்போதைய கல்வியாண்டில் தமிழ் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்து படிக்க திண்டிவனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அரசு கல்லூரி கல்வி இயக்குனரகம் விதிகளின்படி 16 நாட்கள் வயது முதிர்வு காரணமாக கல்லூரியில் சேர்க்க முடியாது என்று மறுத்துள்ளனர்.
இதனால் பழங்குடியின பெண் வித்யா நேற்று முன்தினம் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் அளித்த மனுவில், ‘இளங்கலை தமிழ் முடித்து, முதுகலை தமிழ் படித்து, தமிழில் முனைவர் பட்டம் பெற்று கல்லூரியில் தமிழ் பேராசிரியராக பணியாற்ற விரும்புகிறேன். 24 வயது முடிந்து 16 நாட்கள் ஆகிறது. இதை காரணம் காட்டி கல்லூரியில் சேர அனுமதி மறுக்கின்றனர். விளம்பு நிலையில் வாழும் பழங்குடி மக்களின் படிப்பறிவு விகிதம் 54.3 சதவீதம். இதனை கருத்தில் கொண்டு தமிழக முதல்வர் எனக்கு திண்டிவனம் அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. தமிழ் வகுப்பில் சேர்ந்து படிக்க ஆவன செய்ய வேண்டும்’ என்று தெரிவித்திருந்தார்.
இதுகுறித்து தினகரன் நாளிதழில் நேற்று விரிவாக செய்திகள் வெளியாகின. இதன் எதிரொலியாக தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் பழங்குடியின பெண் வித்யா கல்லூரியில் சேர்வதற்கான நடவடிக்கை எடுத்து அவர் விரும்பிய திண்டிவனம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் தமிழ் இளங்கலை முதலாமாண்டு சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார். கல்லூரியில் சீட்டு கிடைத்த மகிழ்ச்சியில் தமிழக அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் பழங்குடியின பெண் வித்யா நன்றி தெரிவித்துள்ளார்.
The post பழங்குடியின பெண்ணுக்கு அரசு கல்லூரியில் சேர ஆணை appeared first on Dinakaran.