
சென்னை,
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் பகுதியில் நெரிசலை குறைத்திடும் வகையில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த பாலத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். ஆனால் இந்த மேம்பாலம் தரமற்று கட்டப்பட்டு இருப்பதாகவும், பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டு இருப்பதாகவும், சுற்றுச்சுவரின் கற்கள் பெயர்ந்து விழுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால் அதற்கு தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இது தமிழக அரசின் நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
"மல்லியக்கரை- ராசிபுரம் - திருச்செங்கோடு - ஈரோடு ஆகிய இருவழிச்சாலையை, நான்குவழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் மற்றும் இருவழிதட உயர்மட்டப்பாலம் மற்றும் சங்ககிரிக்கு அணுகுப்பாலம் ஆகிய பணி ரூ.373.15 கோடியும், நில எடுப்பு பணிக்கு ரூ.51.23 கோடியும் என மொத்தம் ரூ.424.38 கோடிக்கு திருத்திய மதிப்பீட்டு அடிப்படையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
இந்த பணிகள் முடிவடைந்ததால் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்று (நேற்று) திறந்து வைத்தார். இந்த நிலையில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் மேம்பாலத்தின் தரம் குறித்து அவதூறு செய்திகள் பரப்பபப்பட்டு வருகின்றன. இந்த பாலம் 3.403 கிலோ மீட்டரில் இருவழி தட உயர்மட்ட மேம்பாலம் ஆகும். இந்த பாலம் பணியானது சர்வதேச தரத்திலான மேற்பார்வை குழுவினர் மூலம் தரக்கட்டுப்பாடு சோதனைகள் மேற்கொண்டு சிறந்த முறையில் கட்டப்படுள்ளது.
இந்த மேம்பாலத்தின் பணியின் ஒவ்வொரு நிலையிலும் இந்திய அரசு நிர்ணயித்துள்ள அனைத்து விதமான தரக்கட்டுப்பாடு சோதனைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னரே அடுத்த கட்ட பணிகள் செயலாக்கம் செய்யப்பட்டு பாலமானது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒப்பந்ததாரர் 7 ஆண்டுகளுக்கு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள வழிவகை செய்யபட்டுள்ளது.
எனவே மேம்பாலத்தின் தரம் குறித்து வெளியான செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. மேலும் அரசாங்கத்தின் நல்ல திட்டங்களுக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் பரப்பப்படுகிறது."
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.