திருப்பூர், மே 30: தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து வருகின்ற ஜூன் 2ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட உள்ளன. கோடை விடுமுறையை கொண்டாட திருப்பூரிலிருந்து ஏராளமானோர் தங்கள் சொந்த ஊர் மற்றும் வெளியூர் சென்றனர். இதற்காக கோடை விடுமுறை விடப்பட்டதன் துவக்கத்திலும், வார இறுதி விடுமுறை நாட்களிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் எந்தவித நெரிசலும் இன்றி கோடை விடுமுறையை அனுபவிக்க தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்றனர். சொந்த ஊருக்கு சென்றவர்கள் ஜூன் 2ம் தேதி பள்ளி திறப்பதை முன்னிட்டு தற்போது முதலே திருப்பூர் திரும்பி வர தயாராகி வருகின்றனர். அவ்வாறு திருப்பூர் திரும்பி வருபவர்களுக்கு ஏதுவாக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து திருப்பூர் மண்டல போக்குவரத்து கழகத்தினர் கூறுகையில், வெளியூர் சென்றவர்கள் திருப்பூர் திரும்பி வர ஏதுவாக இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. குறிப்பாக சென்னை சென்றவர்கள் திருப்பி வர ஏதுவாக சென்னையில் இருந்து திருப்பூருக்கு இன்றும் நாளையும் 2 பேருந்துகள் இயக்கப்படுகிறது.
இதேபோல் , கோவில் வழி பேருந்து நிலையத்திலிருந்து மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களுக்கு 40 பேருந்துகளும், ஈரோடு, சேலம், திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகளுக்கு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளை காட்டிலும் கூடுதலாக 20 பேருந்துகளும், புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு 20 பேருந்துகள் என 80 பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இவை இன்று முதல் வெளி மாவட்டங்களுக்கு இயக்கப்பட்டு அங்கிருந்து பொதுமக்கள் எந்தவித கூட்ட நெரிசலும் இல்லாமல் திருப்பூர் திரும்பி வரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் வருகின்ற ஜூன் 1 மற்றும் 2ம் தேதிகளில் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டத்தின் புறநகர் பகுதிகளுக்கு நகரப் பேருந்துகள் எந்தவித இடையூறும் இல்லாமல் முழுவதுமாக இயக்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
The post பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி இன்று முதல் சிறப்பு பேருந்து ஏற்பாடு appeared first on Dinakaran.