சென்னை: பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவிகள் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப, அறிவியல் பூர்வமான விளையாட்டு பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் 6 இடங்களில் செயல்பட்டு வருகின்றன.
இந்த முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் 5ம் தேதி (நேற்று) முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது, முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர விருப்பமுள்ள 6ம், 7ம் மற்றும் 8ம் வகுப்புகளில் சேர விரும்பும் 13 வயதிற்க்குட்பட்ட மாணவ, மாணவிகள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்ய கடைசி நாள் வருகிற 30ம் தேதி மாலை 5 மணி வரை ஆகும்.
தேர்வுக்கு ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் தகவல்களுக்கு 9514000777 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம். முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர விரும்பும் மாணவ – மாணவிகளுக்கான மாநில அளவிலான தேர்வு போட்டிகள் வருகின்ற மே 2ம் தேதி காலை 7 மணியளவில் கீழ்காணும் விபரப்படி நடைபெற இருப்பதால் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்கள் மட்டுமே தவறாது கலந்து கொள்ள வேண்டும். இதற்கான தகவல்கள் குறுச்செய்தி, வாட்ஸ்ஆப் மூலமாக உரியவர்களுக்கு தெரிவிக்கப்படும்.
1. தடகளம் (ஆ) மற்றும் (பெ), குத்துசண்டை (ஆ), பளுதூக்குதல் (ஆ) (ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம், சென்னை – மே 2ம் தேதி காலை 7 மணி)
2. டென்னிஸ் (பெ) (நுங்கம்பாக்கம், விளையாட்டரங்கம், சென்னை – மே 2ம் தேதி காலை 7 மணி)
3. ஜிம்னாஸ்டிக்ஸ் (ஆ) மற்றும் (பெ), நீச்சல் (ஆ) மற்றும் (பெ) (AGB நீச்சல் குள வளாகம், வேளச்சேரி – மே 2ம் தேதி காலை 7 மணி)
4. வில்வித்தை (ஆ), சைக்கிளிங் (ஆ) மற்றும் (பெ), இறகுபந்து (ஆ) மற்றும் (பெ) (TNPESU, மேலக்கோட்டையூர், செங்கல்பட்டு – மே 2ம் தேதி காலை 7 மணி)
* விளையாட்டு தகுதிகள்
தனி நபர் மற்றும் குழு விளையாட்டு போட்டிகளில் விண்ணப்பிப்பவர்கள் மாநில மற்றும் மாவட்ட அளவில் குடியரசு / பாரதியார் தின விளையாட்டு போட்டிகள், அங்கீகரிக்கப்பட்ட மாநில விளையாட்டு சங்கங்கள் நடத்தும் போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது தமிழ்நாடு அணியில் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவில் தேசிய விளையாட்டு சம்மேளனங்கள், இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு, இந்திய விளையாட்டு அமைச்சகம் நடத்தும் போட்டிகளில் கலந்து கொண்டவர்களும், பன்னாட்டு அளவில் அங்கீகாரம் பெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு மற்றும் பதங்கங்கள் பெற்றவர்களும் மாநில மற்றும் மாவட்ட அளவில் முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் பதக்கம் பெற்றவர்களும் விண்ணப்பிக்க தகுதி பெற்றவர்கள்.
The post பள்ளிகளில் பயிலும் மாணவ – மாணவிகள் முதன்மை நிலை விளையாட்டு மையத்தில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.