
தருமபுரி,
தருமபுரி மாவட்டம் தங்கவேல் தெருவைச் சேர்ந்த பிரகாஷ் குமார் (54). இவர் வெள்ளிச்சந்தையில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19.11.2019-ம் தேதி அதே பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வந்த 10-வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.
இதுகுறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறவே பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் பென்னாகரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்ட பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து பிரகாஷ் குமார் தருமபுரி மகிளா விரைவு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
மேலும் காவல்துறை இவ்வழக்கின் புலன் விசாரணையை முடித்து மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இவ்வழக்கை விசாரித்த தருமபுரி மாவட்ட சிறப்பு போக்சோ நீதிமன்ற பொறுப்பு நீதிபதி, இன்று பிரகாஷ் குமாரை குற்றவாளியாக அறிவித்து 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 15,000/-அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.