பல்கலைக்கழக துணைவேந்தர் வீடு உள்பட 3 வீடுகளில் ரூ.50 லட்சம் கொள்ளை

5 hours ago 1

திருமலை : குப்பத்தில் பல்கலைக்கழக துணைவேந்தர் வீடு உள்பட 3 வீடுகளில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றுள்ளனர்.ஆந்திர மாநிலம் குப்பம் அடுத்த குண்டலசாகரம் பகுதியை சேர்ந்தவர் கிரண்குமார். இவர் திராவிட பல்கலைக்கழக துணைவேந்தராக உள்ளார். இந்த பல்கலைக்கழகத்தில் பி.ஆர்.ஓவாக பணியாற்றி வருபவர் நரேஷ்.

இவர்களின் வீடு அருகருகே உள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் அனைவரும் பணிக்கு சென்றுவிட்டனர். அப்போது, இருவரின் வீடுகளிலும் மர்ம ஆசாமிகள் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, பணம், வெள்ளிப்பொருட்களை திருடிச்சென்றுள்ளனர்.

அதேபோல் அருகே உள்ள நலகம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் ரமேஷ், இவரும், இவரது மனைவியும் ஆசிரியர்கள் என்பதால் வீட்டை பூட்டிக்கொண்டு பள்ளிக்கு சென்றுவிட்டனர். அவர்கள் வீட்டிலும் மர்ம ஆசாமிகள் உள்ளே புகுந்து நகை, பணத்தை திருடிச்சென்றுள்ளனர். பட்டப்பகலில் ஒரே நேரத்தில் 3 பேரின் வீடுகளில் நடந்த திருட்டில் சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பணம் திருடு போயிருக்கலாம் என தெரிகிறது.

இதுறித்து கிரண்குமார், நரேஷ், ரமேஷ் ஆகியோர் குப்பம் போலீசில் தனித்தனியே புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

மேலும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. பின்னர் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.குப்பம் பகுதியில் கடந்த ஒரே வாரத்தில் மட்டும் 7 வீடுகளில் திருட்டு நடந்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.

The post பல்கலைக்கழக துணைவேந்தர் வீடு உள்பட 3 வீடுகளில் ரூ.50 லட்சம் கொள்ளை appeared first on Dinakaran.

Read Entire Article