
சென்னை,
ரெயில்வே இணை மந்திரி சோமண்ணா, நேற்று சென்னை வந்தார். சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து தனி ரெயிலில் அரக்கோணம் வழியாக காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையம் வந்தார். வழிநெடுகிலும் நடைபெறும் ரெயில்வே பணிகளை அவர் ஆய்வு செய்தார்.காஞ்சீபுரம் புதிய ரெயில் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட மத்திய மந்திரி சோமண்ணா, இந்திராநகர் பகுதியில் சுரங்கப்பாதை அமைத்து தரகேட்டு போராடி வரும் மக்களை சந்தித்து கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ரெயில் கட்டணம் பொது மக்களை பாதிக்காத வகையில் படிப்படியாக உயர்த்தப்படும். இது குறித்து விவாதம் நடந்து வருகிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் புதியதாக அமைய இருக்கும் பரந்தூர் விமான நிலைய பகுதியில் ரெயில் நிலையம் அமைப்பது தொடர்பாக இறுதி முடிவு எதுவும் எடுக்கவில்லை. அது தற்போது பரிசீலனையில் உள்ளது, இவ்வாறு அவர் கூறினார். அப்போது சென்னை கோட்ட ரெயில்வே மேலாளர் விஸ்வநாத் பி.ஈர்யா மற்றும் பிற அதிகாரிகள் உடன் இருந்தனர். இதையடுத்து மந்திரி சோமண்ணா, காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் கோவில், காமாட்சி அம்மன் கோவில்களில் சாமி தரிசனம் செய்து விட்டு ஸ்ரீபெரும்புதூரில் நடைபெற்ற கட்சி நிகழ்ச்சிக்கு புறப்பட்டு சென்றார்.