
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டி வடக்குத் தெருவைச் சேர்ந்த தங்கமுத்து(எ) அந்தோணி மகன் மார்ட்டின் (வயது 45). விவசாயியான இவர், ஊருக்கு வடக்கே தனது 2 ஏக்கர் வயலில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளார். அதைக் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தாமல் இருப்பதற்காக நிலத்தைச் சுற்றி கம்பிவேலி அமைத்து, அதில் மின்சாரம் பாய்ச்சி இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவர் கடந்த 2ம்தேதி பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றார். நீண்ட நேரம் ஆகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதையடுத்து உறவினர்கள் சென்று பார்த்தபோது, அவர் வயலில் இறந்து கிடந்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூர் போலீசார் சென்று, உடலை கைப்பற்றி கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.