
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தில் இருந்து மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, சார்ஜா, துபாய், அபுதாபி, குவைத், பாங்காக், மஸ்கட், தோஹா உள்ளிட்ட வெளிநாட்டு நகரங்களுக்கு சர்வதேச பயணிகள் விமானங்களும், சென்னை, மதுரை, மும்பை, பெங்களூரு, ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களுக்கு உள்நாட்டு விமான போக்குவரத்தும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையம் அதிக அளவிலான பயணிகளை கையாண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், துபாய், இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து அதிக அளவிலான பயணிகள் சென்று வந்துள்ளனர்.
மேலும் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் அதிக அளவிலான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. அதேநேரத்தில் விடுமுறை நாட்களில் அதிகபட்சமாக சுமார் 6 ஆயிரம் பயணிகள் வரை கையாளப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி விமான நிலையம் தென் ஆசியாவிலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளது.
2025-ம் ஆண்டு ஜனவரியில் புதிய உச்சத்தை எட்டிய திருச்சி விமான நிலையம் ஏப்ரலில் 1,17,072 சர்வதேச பயணிகளை கையாண்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 6.8 சதவீதம் அதிகரித்துள்ளது. இச்சாதனை திருச்சியின் உலகளாவிய இணைப்புமற்றும் பொருளாதார முக்கியத்துவம் பெற்றுள்ளதுகுறிப்பிடத்தக்கது.