தமிழக கோயில்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் ஐகோர்ட்டு மதுரை கிளை அனுமதி

1 day ago 6

திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு அந்தந்த காவல்துறை அனுமதி வழங்குவது வழக்கம். ஆனால் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை காரணம் காட்டி காவல்துறையினர் அனுமதி மறுத்ததின் காரணமாக, 7-க்கும் மேற்பட்ட மனுக்கள் ஐகோர்ட்டு மதுரை கிளையில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

இந்த மனுக்கள் நீதிபதி புகழேந்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர்கள் தரப்பில், "கடந்த பல ஆண்டுகளாக கோவில் திருவிழாவின் போது ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது சட்டம், ஒழுங்கு பிரச்சினைகளை காரணம் காட்டி காவல் துறையினர் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க மறுக்கிறார்கள். அதனை தொடர்ந்து நடத்த அனுமதி வழங்க வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை பதிவு செய்து கொண்ட பின் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், "சமூக ஊடக காலம் இது. இந்த சூழலில் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்து உள்ளீர்கள். இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அதிக பணம் செலவு செய்யப்படுகிறது. எனவே ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது. ஆடல், பாடல் நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம் ரூ.25 ஆயிரம் மனுதாரர் செலுத்த வேண்டும். இந்த 25 ஆயிரம் பணத்தைக் கொண்டு, அந்த கிராமத்தில் நீர் நிலைகளை தூர் வார வேண்டும். இதனால் கிராமம் செழிப்பாக இருக்கும்" என உத்தரவிட்டார். 

Read Entire Article