
சென்னை,
பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த சூழலில் 2025ம் ஆண்டுக்கான பத்மபூஷன் விருதுகளை மத்திய அரசு கடந்த ஜனவரி 25-ம் தேதி அறிவித்தது.
அதன்படி, தமிழகத்தை சேர்ந்த 3 பேருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டது. அதில் நடிகரும் கார் ரேசருமான அஜித்குமார் மத்திய அரசு பத்மபூஷன் விருது அறிவித்தது. இந்தநிலையில் நேற்று டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நடிகர் அஜித் குமாருக்கு பத்ம பூஷன் விருது வழங்கி கவுரவித்தார்.
இதற்காக அரசியல் தலைவர்கள், திரைப் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் அஜித்குமாருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ஆந்திர மாநில துணை முதல்மந்திரி பவன் கல்யாண் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
"பத்மபூஷன் விருதைப் பெற்ற புகழ்பெற்ற நடிகர் அஜித் குமார் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். குடும்பம், காதல் கதை போன்ற பல்வேறு வகையான படங்களில் நடித்து, அனைத்து வயதினரையும் மகிழ்வித்து உள்ளார். திரை உலகில் தனக்கென ஒரு தனித்துவமான முத்திரையைப் அவர் பதித்துள்ளார். பார்முலா பந்தய வீரராகவும் சிறந்து விளங்குகிறார். ஒரு நடிகராகவும், கார் பந்தய வீரராகவும் அஜித் குமார் அவர்கள் இன்னும் பல வெற்றிகளை பெற வாழ்த்துகிறேன்". இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.