
கொழும்பு,
இலங்கை - வங்காளதேசம் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 79.3 ஓவர்களில் 247 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக ஷாத்மான் இஸ்லாம் 46 ரன்கள் அடித்தார். இலங்கை தரப்பில் அசிதா பெர்னண்டோ மற்றும் சோனல் தினுஷா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தியது. 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுக்கு 290 ரன்கள் சேர்த்து 43 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. பதும் நிசங்கா 146 ரன்களுடனும், பிரபாத் ஜெயசூர்யா 5 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். லஹிரு உதரா 40 ரன்னிலும், சன்டிமால் 93 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இந்த சூழலில் இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பதும் நிசங்கா 158 ரன்களிலும், ஜெயசூர்யா 10 ரன்களிலும், தனங்சயா டி சில்வா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் குசல் மெண்டிஸ் நிலைத்து விளையாடி அணியை முன்னெடுத்து சென்றார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 84 ரன்களில் ஆட்டமிழந்தார். முடிவில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 116.5 ஓவர்களில் 458 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. வங்காளதேசம் தரப்பில் தைஜூல் இஸ்லாம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் 211 ரன்கள் பின்னிலையுடன் வங்காளதேசம் 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.