பதிவுத்துறையில் தனி மரியாதை

1 day ago 5

ஒரு மாநிலத்தின் வளம் மக்களின் வாங்கும் சக்தியையும், அவர்களுக்கு உள்ள சொத்துகள் வாங்கும் சக்தியின் அளவையும் வைத்து மதிப்பிடப்படுகிறது. மாநிலத்தின் வரி வருவாயில் பதிவுத்துறை முக்கிய பங்கு வகிக்கிறது. சொத்துகளை வாங்கும்போதும், அதை விற்கும் போதும் எழுத்துப்பூர்வமாக பத்திரங்களில் எழுதி அதை பதிவு செய்யும்போதுதான் சட்டப்பூர்வமான பாதுகாப்பு, அங்கீகாரம், நிரந்தரத்தன்மை கிடைக்கும். தமிழ்நாட்டில் பல்வேறு அரசு துறைகளில் ஒன்றாக பத்திரங்களை பதிவு செய்யும் பதிவுத்துறை இயங்குகிறது. தமிழ்நாட்டில் பதிவுத்துறை 1864-ம் ஆண்டில் இருந்து இயங்கி வருவது தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது.

முதல் பத்திரம் வடக்கு மெட்ராஸ் சார்பதிவாளர் அலுவலகத்தில் 1865-ம் ஆண்டு ஜனவரி மாதம் 5-ந்தேதி பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த பத்திரம் இப்போதும் பதிவுத்துறையால் பராமரிக்கப்பட்டு வருவது மிகவும் பாராட்டுக்குரியது. அப்போது கைலாச ஆரோக்கிய முதலி என்பவர் ராயபுரத்தில் ஒரு கிரவுண்டு 352 சதுர அடி இடத்தை ரூ.500-க்கு, ஒரு ஆங்கிலேய நிறுவனத்துக்கு விற்று இருக்கிறார். இதற்கு முத்திரை தாள் கட்டணம் ரூ.8 ஆக இருந்திருக்கிறது. 1865-லிருந்து 1874 வரை கர்னல் ராபர்ட் மக்கன்சி மக்டொனால்ட் பதிவுத்துறை தலைவராக இருந்திருக்கிறார். அவரைத்தொடர்ந்து 6 ஆண்டுகளுக்கு ராம் அய்யங்கார் இந்த பதவியில் இருந்திருக்கிறார் என்ற குறிப்பு இப்போதும் பதிவுத்துறையிடம் இருக்கிறது.

பதிவுத்துறை தொடங்கப்பட்ட முதல் ஆண்டிலேயே ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 871 வருவாய் ஈட்டியிருக்கிறது. அப்படி தொடங்கப்பட்ட பதிவுத்துறையின் கட்டுப்பாட்டில் இப்போது மாநிலம் முழுவதும் 587 சார்பதிவாளர் அலுவலகங்கள் இருக்கின்றன. கடந்த 2024-25-ல் மட்டும் தமிழ்நாட்டில் 33 லட்சத்து 59 ஆயிரத்து 150 பத்திரங்கள் பதிவு செய்யப்பட்டு, 21 ஆயிரத்து 968 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. தற்போது முத்திரைத்தாள் கட்டணமாக மொத்த சொத்து மதிப்பில் 7 சதவீதமும், பதிவு கட்டணமாக 2 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது. அனைத்து ஆவண பதிவுகளின்போதும் ஆவணச்சொத்தின் புகைப்படத்துடன் அதன் புவிசார் அச்சுகளையும் ஆவணத்தில் இணைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

பத்திரப்பதிவு அலுவலகங்களில் சொத்துகள் பதிவு மட்டுமல்லாமல் திருமணங்களும் பதிவு செய்யப்படுகின்றன. இப்போது முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின்பேரில் பத்திரப்பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் சார்பதிவாளர் அலுவலகங்களில் பல சீர்திருத்தங்களை செய்துவருகிறார். அதில் ஒரு பகுதியாக அனைத்து சார்பதிவாளர் (சப்-ரெஜிஸ்திரார்) அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்கள் அங்குள்ள சார்பதிவாளர் மேஜைக்கு எதிரிலும் உதவியாளர், இளநிலை உதவியாளர் மேஜைக்கு எதிரிலும் நின்றுக்கொண்டு பேசும் நிலை இனி இருக்காது. ஒவ்வொரு அலுவலருக்கும் முன்பு குறைந்தபட்சம் 2 நாற்காலிகள் போடப்பட்டு இருக்கவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

பத்திரப்பதிவு அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை நாற்காலியில் உட்கார வைத்துத்தான் சார்பதிவாளர்கள் பேசவேண்டும். எந்த சூழ்நிலையிலும் அவர்களை நிற்க வைத்துக்கொண்டு பேசக்கூடாது. யாரையாவது நிற்க வைத்து பேசியதை உயர் அதிகாரிகள் கண்காணிப்பு கேமராக்களில் பார்த்துக்கொண்டு இருக்கும்போது, கண்டுபிடித்தால் துறை ரீதியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுத்துறை அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் இந்த தனி மரியாதை வரவேற்புக்குரியது. இதுபோல அரசு அலுவலகங்களுக்கும் வரும் அனைவரையும் உட்கார வைத்து பேசும் நடைமுறை வந்தால் மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

Read Entire Article