
முல்லன்பூர்,
ஐ.பி.எல் தொடரில் முல்லன்பூரில் நேற்று நடைபெற்ற 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டை இழந்து 219 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிரடியாக ஆடிய பிரியன்ஷ் ஆர்யா 43 பந்தில் 103 ரன்கள் எடுத்தார்.
சென்னை தரப்பில் கலீல் அகமது, அஸ்வின் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 220 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 18 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. சென்னை தரப்பில் அதிகபட்சமாக டெவான் கான்வே 69 ரன்கள் எடுத்தார். இந்தப்போட்டியின் ஆட்டநாயகன் விருது பிரியன்ஷ் ஆர்யாவுக்கு வழங்கப்பட்டது.
இந்த ஆட்டத்தில் பஞ்சாப் பேட்டிங் செய்த போது ஆட்டத்தின் 13வது ஓவரை சி.எஸ்.கே.வின் முதன்மை பந்துவீச்சாளர் பதிரனா வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட பிரியன்ஷ் ஆர்யா அடுத்தடுத்து 3 சிக்சர்களை (ஹாட்ரிக்) விளாசினார். அவர் அடுத்தடுத்து சிக்சர்களை விளாசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.