
சென்னை,
தெலுங்கில் வரலாற்று புதினத்தை தழுவி உருவாகி இருக்கும் ஆன்மிக திரைப்படம் 'கண்ணப்பா'. மிகவும் பிரபலமான மகாபாரதம் தொடரை இயக்கிய பாலிவுட் இயக்குனர் முகேஷ் குமார் சிங் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். வரலாற்று பின்னணியில் கடவுள் சிவனை வழிபடும் அவரது தீவிர பக்தன் கண்ணப்பரை பற்றிய கதையை தழுவி இப்படம் உருவாகி இருக்கிறது. இத்திரைப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு கண்ணப்பர் வேடத்தில் நடித்துள்ளார். மேலும், மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். பான் இந்தியா அளவில் உருவாகியுள்ள இப்படம் நாளை திரைக்கு வருகிறது.
இந்த நிலையில் படத்தின் வெளியீட்டுக்குப் பிறகு படத்தை அநாகரீகமாக விமர்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று 'கண்ணப்பா' படக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், "எங்கள் 'கண்ணப்பா' திரைப்படம் ஜூன் 27, 2025 அன்று முழு சட்டப்பூர்வ அனுமதியுடன் உலகம் முழுவதும் வெளியாகிறது. படத்தையோ அல்லது அதன் பங்குதாரர்கள் குறித்து அவதூறு பரப்பினால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தப் படம் பொதுமக்களுடன் அதிக அளவில் தொடர்புப்படுத்தும் வகையில் பொறுப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து விமர்சகர்களும் முன்கூட்டியே திட்டமிட்ட உள்நோக்கம் அல்லது பழிவாங்கும் எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல், படத்தைப் பார்த்து, அதன் சாரத்தைப் பாராட்டி, நோக்கத்தைப் புரிந்துகொண்டு, பின்னர் பொறுப்புடன் கருத்து தெரிவிக்குமாறு மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இந்திய அரசியலமைப்பின் பிரிவு 19 (1) (அ)-ன் கீழ் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கான உரிமை புனிதமானது மற்றும் பாதுகாக்கப்பட்டது என்பதை நாங்கள் அங்கீகரிக்கும் அதே வேளையில், ஒரு படைப்பின் மீது வேண்டுமென்றே அழிவுகரமான தாக்குதல், அது உடல் ரீதியாகவோ அல்லது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருந்தாலும், அது கருத்துரிமை அல்ல. மாறாக நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒரு வகையான செயல் என்று நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக தக்க சட்ட நடவடிக்கை எடுக்கவும் எங்களுக்கு உரிமை உள்ளது" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.