
பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு ராஜீவரரு, பிரம்மதத்தன் முன்னிலையில் மேல்சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துகிறார்.
தொடர்ந்து நாளை (சனிக்கிழமை) முதல் 19-ந்தேதி வரை தினமும் பல்வேறு பூஜை, வழிபாடுகள் நடைபெறுகிறது. 19-ந்தேதி இரவு அத்தாழ பூஜைக்கு பிறகு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்படும்.
இந்தநிலையில் சபரிமலையில் பக்தர்கள் நேரடியாக தரிசனத்திற்கு செல்ல திருவிதாங்கூர் தேவஸ்தானம் வசதிகளை செய்துள்ளது. இதுதொடர்பாக தேவஸ்தானம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சபரிமலையில் சாமி தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் 18-ம் படி வழியாக சன்னிதானத்திற்கு வந்த பின், வழக்கமான மேம்பாலம் வழியாக செல்லாமல் கொடிமரத்தில் இருந்து நேரடியாக கோவில் நடை பகுதிக்கு இரண்டு வரிசையாக செல்ல வசதி செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் பக்தர்களுக்கு கூடுதல் நேரம் தரிசனம் கிடைக்கும். வரும் காலங்களிலும் இந்த நடைமுறையை தொடர தேவஸ்தானம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.