'பக்ரீத் பண்டிகை' - அரசியல் தலைவர்கள் வாழ்த்து

15 hours ago 3

சென்னை,

தியாகத் திருநாள் என்று அழைக்கப்படும் பக்ரீத் பண்டிகை இஸ்லாமியர்களால் நாளை உற்சாகமாக கொண்டாடப்பட உள்ளது. பக்ரித் பண்டிகையையொட்டி, எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அரசியல் தலைவர்கள் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தி பின்வருமாறு;

1. 'தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்' - எடப்பாடி பழனிசாமி பக்ரித் வாழ்த்து

எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள பக்ரித் வாழ்த்துச்செய்தி;

தியாகத்தைப் போற்றும் புனிதத் திருநாளாம் பக்ரீத் திருநாளை இறையுணர்வுடன் கொண்டாடி மகிழும் அன்பிற்கினிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளங்கனிந்த `பக்ரீத்' திருநாள் நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் எண்ணத்தை மேலோங்கச் செய்யும் நன்நாளாகவும்; ஏற்றத் தாழ்வுகளை அகற்றி அனைவரும் ஒன்றுகூடி இறைவனின் புகழை நெஞ்சத்தில் நிலைக்கச் செய்து, விருந்தளித்து மகிழ்ச்சியில் திளைக்கும் திருநாளாகவும் கொண்டாடப்படுவதே `பக்ரீத்' திருநாளாகும்.

இத்தியாகத் திருநாளில் பசித்தவர்களுக்கு உணவளியுங்கள்; துன்பப்படுபவர்களுக்கு உதவிபுரியுங்கள்; அண்டை அயலாரிடம் அன்பாக இருங்கள்; எளியவர்களிடம் கருணை காட்டுங்கள்; சிந்தனையிலும், நடத்தையிலும் தூய்மை உடையவராக இருங்கள் என்ற நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளை மக்கள் அனைவரும் மனதில் நிறுத்தி வாழ்ந்தால், உலகில் அமைதி நிலவி, வளம் பெருகும்.

இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் எல்லோரிடமும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்; அது மனிதகுல நல்வாழ்விற்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என்று மனதார வாழ்த்தி, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது நல்வழியில், எனது பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

2. ஒற்றுமையை வளர்ப்போம், மனிதநேயத்தை விரிப்போம் - செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்துச் செய்தி;

தியாகம், ஈகை, இரக்கம் - மனித வாழ்வின் உயரிய அடிப்படை பண்புகள். இவை அனைத்தும் பரப்பப்படும் புனித திருநாள் இந்த பக்ரீத். வலியும், பாசமும், சமர்ப்பணமும் கலந்து பொங்கும் ஆன்மீகத் தூய்மை கொண்ட நமது சக முஸ்லிம் சகோதரர்களின் பெரும் பண்டிகை.

இப்ராஹிம் நபியின் வாழ்க்கை, நம்மை தியாகம் செய்யும் துணிவுக்கு வழிவகுக்கும். இஸ்மாயில் நபியின் பணிவு, நம் ஆணவத்தை விலக்கி பண்புக்கேற்ற வாழ்வுக்கு வழிகாட்டும். இவர்கள் நமக்கு தரும் பாடம் ஒருவருக்காக ஒருவர் வாழும் மனம்.

இன்றைய உலகம் பல்வேறு சோதனைகளை சந்திக்கின்ற நேரத்தில், பக்ரீத் திருநாள் நமக்கு கொடுக்கும் முக்கியமான அழைப்பு. ஒற்றுமையை வளர்ப்போம், மனிதநேயத்தை விரிப்போம், வெறுப்பை விலக்குவோம். இந்த நாட்டின் மூளைநார்களில் நெஞ்சமாக பதிந்திருக்கும் பன்முகம், பாசம், பரிவு என்பன காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கொள்கைகளாக இருந்து வருகிறது.

இந்நாளில் உங்கள் இல்லங்களில் மகிழ்ச்சி பொங்கட்டும். உங்கள் வாழ்க்கை ஒளிமயமாகட்டும். நமது சமூகத்தில் இனிய சகோதரத்துவம் வேரூன்றட்டும். இந்த நாள், ஏழைஎளியோரிடம் ஈரமான இதயத்தையும், ஆதரவற்றோரிடம் ஒரு சிந்திய நம்பிக்கையையும்,, எதிரிகளிடையே கூட ஒரு இனிய புரிதலையும் உண்டாகட்டும். இணக்கமே இஸ்லாமின் இயல்பு. சமத்துவமே காங்கிரசின் சாரம். இரண்டும் சேர்ந்தால்தான் இந்தியா என்றும் நிறைவேறும். மனிதம் வாழட்டும், வேற்றுமை ஒழியட்டும், ஒற்றுமை ஓங்கட்டும்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மத, மொழி, இன வேறுபாடுகளைத் தாண்டி ஒற்றுமையை வலியுறுத்தும் போராளியாக என்றும் திகழ்ந்து வருகிறது. முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் பக்ரீத் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

3. உலகம் முழுவதும் அன்பு, அமைதி, மகிழ்ச்சி, வளம் செழிக்க வேண்டும் - அன்புமணி ராமதாஸ்

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பக்ரீத் திருநாள் வாழ்த்து செய்தி;

தியாகத்தை போற்றுவதற்கான பக்ரீத் திருநாளை கொண்டாடும் உலகம் முழுவதுமுள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இஸ்லாமிய இறைதூதர்களில் ஒருவரான இப்ராகிம் நெடுநாட்களுக்கு பிறகு தமக்கு பிறந்த மகன் இஸ்மாயிலை கனவில் கிடைத்த இறைவனின் கட்டளையை மதித்து உயிர்ப்பலி கொடுக்கத் துணிந்தார். தமக்காக மகனையே தியாகம் செய்யத் துணிந்த இறைதூதரை எண்ணி வியந்த இறைவன், உடனடியாக வானவரை அனுப்பி இஸ்மாயில் பலிகொடுக்கப்படும் நிகழ்வை தடுத்து நிறுத்தியதுடன், அதற்குப் பதிலாக ஆட்டைக் கொடுத்து பலியிடும்படி கேட்டுக் கொண்டார். இறைதூதர் இப்ராகிமின் தியாக உள்ளத்தைப் பாராட்டும் விதமாகவே உலகம் முழுவதும் பக்ரீத் திருநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. இது திருவிழா மட்டுமல்ல... இறைபக்தியை நினைவூட்டும் நாளும் கூட.

இறைபக்தியையும் கடந்து இந்தத் திருநாள் வலியுறுத்தும் செய்தி இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும்; அண்டை வீட்டாருடன் நல்லுறவை பாராட்ட வேண்டும் என்பதாகும். அதற்காகத் தான் ஆடு, மாடு ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதன் மூலம் கிடைக்கும் இறைச்சியை மூன்று சம பங்குகளாக பிரித்து, ஒரு பங்கை அண்டை வீட்டாருக்கும், நண்பர்களுக்கும் மற்றொரு பங்கை ஏழைகளுக்கும் கொடுத்துவிட்டு மூன்றாவது பங்கை தங்கள் தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று பக்ரித் வலியுறுத்துகிறது. இது அனைவரும் கடைபிடிக்க வேண்டிய அற்புதமான பாடமாகும்.

பக்ரீத் சொல்லும் பாடம் இஸ்லாமியர்களுக்கு மட்டுமானது அல்ல. உலகில் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய பாடம் அதுவாகும். அந்த பாடத்தை அனைவரும் பின்பற்ற வேண்டும்; உலகம் முழுவதும் அன்பு, அமைதி, சகோதரத்துவம், நல்லிணக்கம், மகிழ்ச்சி, வளம் உள்ளிட்டவை செழிக்க வேண்டும் என்று கூறி மீண்டும் ஒருமுறை பக்ரீத் திருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

4.இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு பக்ரித் வாழ்த்து - ராமதாஸ்

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தி

உலகெங்கும் வாழும் இஸ்லாமிய பெருமக்களுக்கு ஈகை தின நல்வாழ்த்துக்கள்! இஸ்லாமியர்களின் தியாகத்தையும், கொடைத்தன்மையையும் போற்றும் பக்ரித் திருநாளை கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமியர்களின் ஐந்து புனிதக்கடமைகளில் ஒன்று மெக்கா நகருக்கு ஹஜ் புனிதப் பயணம் மேற்கொள்வது ஆகும்.

இக்கடமையின் ஓர் அங்கமாக " ஹஜ் மாதம் 10 ஆம் நாள் சிறப்புத் தொழுகை நடத்தி" அதன் முடிவில் இறைவனுக்காக ஆடு, மாடு, ஒட்டகம் போன்றவற்றை பலியிடுவதை இஸ்லாமிய மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதற்கான நடைமுறைகளில் பல நல் நெறிகள் அடங்கியுள்ளன.

பக்ரித் தியாகத்தை மட்டுமின்றி ஈகை, மனித நேயம், நல்லுறவு, சகோதர தத்துவம், பிற சமூகங்களை நேசித்தல், அங்கம் குறைபாடுகள் உள்ளவர்கள் மீதான அன்பு செலுத்துதல் உள்ளிட்டவைகள் அடங்கும். அந்த வகையில் இது மனிதநேயத் திருவிழாவும் போற்றுதலுக்குரியதாகும். இறைவனுக்காக மகனையே பலியிடத் துணியும் அளவுக்கு இஸ்லாமியர்களுக்கு இறைபக்தி உண்டு என்பதையே இத்திருவிழா நினைவூட்டுகிறது. தியாகத்தை போற்றுவதே இத்திருநாளின் நோக்கமாகும்.

பக்ரித் திருநாள் சொல்லும் செய்தியை புரிந்து கொள்ள வேண்டியவர்கள் புரிந்து கொள்ளாதது தான் உலகம் முழுவதும் இன்று நிலவும் அனைத்து மோதல்களுக்கும், வீழ்ச்சிகளுக்கும் காரணமாக உள்ளது. பக்ரித் திருநாள் சொல்லும் பாடத்தை புரிந்து கொண்டால், உலகில் எங்கும் வெறுப்பு, மோதல், வன்முறை நிலவாது. மாறாக எங்கும் அன்பு சகோதரத்துவம், அமைதி நல்லிணக்கம் ஆகியவை மட்டுமே தழைத்தோங்கும். அத்தகைய நிலையை ஏற்படுத்த கடுமையாக உழைப்போம் என்று இந்த நன்னாளில் உலக மக்கள் உறுதியேற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

Read Entire Article