தமிழக அரசின் அறநிலையத்துறை செயல்பாடுகளை அனைத்து ஆதீனங்களும், ஆன்மிகவாதிகளும், உண்மையான பக்தர்களும் பாராட்டுகின்றனர். கடந்த மூன்றரை ஆண்டுகளில் ரூ.6792 கோடி மதிப்புள்ள 6,500 ஏக்கருக்கும் மேற்பட்ட கோயில் நிலங்கள், 137 கிரவுண்ட் குளங்கள், 186 கிரவுண்ட் பரப்பில் கட்டிடங்கள், 1,215 காலிமனைகள் மீட்கப்பட்டுள்ளன. கோயில்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வதற்கான ஒப்புதல்களை வழங்குவதற்காக, தொல்லியல் துறை நிபுணர்கள், ஆகம நிபுணர்கள் உள்ளிட்டோர் அடங்கிய மாநில அளவிலான நிபுணர் குழு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் தமிழ்நாடு முழுவதும் பல்வேறு கோயில்களில் நேரடி ஆய்வுகள் மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், அதிகாரிகளுக்கு அறிக்கைகள் சமர்ப்பித்துள்ளனர். இதற்கிடையில் அறநிலையத்துறை சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு ஆண்டுதோறும் 500 திருமணங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் அறநிலையத்துறையின் கீழ் உள்ள 20 மண்டலங்களில் உள்ள கோயில்களில் நேற்று 304 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.
அறநிலையத்துறை சார்பில் மணப்பெண்ணுக்கு 4 கிராம் எடையுள்ள தங்கத்தாலி, தம்பதிகளுக்கு கட்டில், மெத்தை, பீரோ உள்பட ரூ.60,000 மதிப்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டது. சென்னை திருவான்மியூரில் நடந்த விழாவில் 31 ஜோடிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திருமணம் நடத்தி வைத்து, சீர்வரிசைகளை வழங்கி வாழ்த்தி பேசினார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு கோயில்களை பழமை மாறாமல் புதுப்பிக்க மாநில அளவில் வல்லுநர் குழு அமைத்தோம். 3 ஆண்டுகளில் 2226 கோயில்களுக்கு குடமுழுக்கு விழா நடத்தியுள்ளோம். மேலும், 10238 கோயில்களில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு, 9000 கோயில்களில் பணிகள் நடந்து வருகின்றன. நன்கொடையாளர்கள் அளித்த ரூ.1103 கோடியை கொண்டு 9,163 கோயில்களில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.
17000 கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம் இந்த ஆட்சியில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 9 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டமும், 720 கோயில்களில் ஒரு வேளை அன்னதானம் வழங்கும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.257 கோடி மதிப்புள்ள 442 கிலோ சுத்த தங்கம் வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு ரூ.5 கோடி வருவாய் கிடைக்கிறது. சிதம்பரம்
கோயில் கனகசபை மீது ஏறி தரிசிக்கும் உரிமையை நிலைநாட்டும் தீர்ப்பை பெற்றதால் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். 1000 ஆண்டு பழமையான 2724 கோயில்களில் ரூ.426.62 கோடி மதிப்பீட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இக்கோயிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பக்தியை பகல் வேஷ அரசியலுக்கு சிலர் பயன்படுத்துகின்றனர். அரசின் சாதனைகளை தடுக்கவே வழக்குகளை தொடர்கின்றனர். தமிழில் குடமுழுக்கு, தமிழில் அர்ச்சனை என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. கோயில்களில் அன்னதானம் திட்டம் மூலம் நாள்தோறும் 92 ஆயிரம் பேர் பசியாறுகின்றனர் என அழுத்தமான பதிவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு கோயில் குடமுழுக்கு, பழமையான கோயில்கள் பாதுகாப்பு, பக்தர்களுக்கு எளிதில் வழிபாடு நடத்த நடவடிக்கை என்பது உள்பட அனைவரின் உரிமைகளை பாதுகாக்கும் அரசாக செயல்படுவதில் மாற்று கருத்துக்கு இடமில்லை.
The post பக்தர்களை காக்கும் அரசு appeared first on Dinakaran.