தமிழக சட்டப்பேரவையில் பள்ளி கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் கோபிசெட்டிபாளையம் செங்கோட்டையன் (அதிமுக) பேசியதாவது: திமுக ஆட்சியமைந்த பின்பு தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகிறார்கள். பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிமுக ஆட்சியில் அங்கங்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி படிப்பை ெகாண்டு வந்தோம். தற்போது, அதில் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளே படிக்கிறார்கள். அந்த குழந்தைகள் தனியார் பள்ளிக்கு செல்லும் நிலை உள்ளது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி: திமுக ஆட்சிக்கு வந்த பின்பு தான் பகுதிநேர ஆசிரியர்களுக்கான வயது வரம்பு உயர்த்தப்பட்டதோடு 2,500 ரூபாய் ஊதிய உயர்வு வழங்கப்பட்டது.
பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியை மறுக்கவில்லை. பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நல்ல முடிவை அறிவிப்பார். செங்கோட்டையன்: அதிமுக பத்தாண்டு ஆட்சி காலத்தில் மொத்தமாக 58 ஆயிரம் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். தற்போதைய திமுக ஆட்சியில் தற்காலிக ஆசிரியர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டு வருகிறார்கள். ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படாததால், 20 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும் என வாக்குறுதியளித்த திமுக அரசு தற்போது ககன் தீப்சிங் பேடி தலைமையில் உயர்மட்டக் குழு அமைத்திருப்பதாகவும், பொறுத்திருந்து பாருங்கள் என நிதியமைச்சர் கூறினார்.
அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள ஈட்டிய விடுப்பு தொகை ரூ.1000 கோடி, ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய ரூ.500 கோடி நிதியை வழங்காமல், ஆட்சி முடியும் நேரத்தில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கும் காலம் வரும், காலம் வந்தால் வாழ்வு வரும் வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே என்ற பாடலை பாடி செங்கோட்டையன் தனது உரையை நிறைவு செய்தார். அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி: திமுக அரசு திட்டங்களால் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த மார்ச் 1ம் தேதி முதல் நேற்று வரை 1,56,290 மாணவர்கள் அரசு பள்ளிகளில் புதிதாக சேர்ந்துள்ளனர். அனைத்து பள்ளிகளிலும் தேர்வு மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர் கீதாஜீவன்: தமிழகத்தில் உள்ள 2,500 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் நடந்து வருகிறது. இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி பெயரை தவிர்த்த செங்கோட்டையன்
பள்ளி கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன் பேசினார். அப்போது, துவக்கத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதாவை வணங்கி தனது உரையை தொடங்குவதாக அறிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், 4 ஆண்டு நல்லாட்சி நடத்திக் கொண்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் என்றும் கூறி சிலருக்கு பாராட்டு தெரிவித்தார். பின்னர் விவாதத்தில் பேசும்போது, ‘எதிர்க்கட்சி தலைவர் முதல்வராக இருந்தபோது’ என்ற வார்த்தையை பயன்படுத்தினார். எதிர்க்கட்சி தலைவர் என்று மட்டுமே அவ்வப்போது கூறிவிட்டு, எடப்பாடி பெயரை செங்கோட்டையன் குறிப்பிடவில்லை. இது அதிமுக எம்எல்ஏக்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
The post பகுதிநேர ஆசிரியர்கள் பணிநிரந்தரம் முதல்வர் நல்ல முடிவை எடுப்பார்: அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி appeared first on Dinakaran.