
தக்கலை,
குமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கு 2 வருடங்களுக்கு முன்பு திருமணமானது. குழந்தைகள் இல்லை. அதே சமயத்தில் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சில மாதங்களுக்கு முன்பு அவரது தாயார் வீட்டிற்கு சென்று தங்கியுள்ளார்.
அப்போது உறவினர்கள் கூறியதன் அடிப்படையில் மேக்காமண்டபம் பாண்டிவிளை பகுதியில் உள்ள ஒரு சபைக்கு சென்றுள்ளார். அங்கு சபை போதகராக ரெஜிமோன் (வயது 43) இருந்தார். அவர், இளம்பெண்ணின் நோய் குணமாக தனிமையில் ஜெபம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
இதனை நம்பிய பெற்றோர், மகளை மட்டும் ஜெபம் செய்யும் அறைக்கு அனுப்பி உள்ளனர். அந்த சமயத்தில் போதகர் ரெஜிமோன், பெண்ணின் அழகில் மயங்கி ஜெபம் செய்வதை மறந்தார். அந்த பெண்ணை திடீரென கட்டிப்பிடித்து பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார்.
மதபோதகரின் அத்துமீறிய செயலை உணர்ந்து அதிர்ச்சி அடைந்த அந்த பெண், போதகரின் பிடியில் இருந்து தப்பித்து வெளியே ஓடி வந்துள்ளார். பிறகு நடந்த விவரத்தை பெற்றோரிடம் கூற, அவர்களும் வெகுண்டெழுந்தனர். அதே சமயத்தில் கோபத்தை தணித்துக் கொண்டு முறைப்படி தக்கலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரெஜிமோனை கைது செய்தனர்.
மேலும் இதுபோன்று அவர் வேறு பெண்களிடம் அத்துமீறியுள்ளாரா? என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.