*ஆசிரியர்கள் நடவடிக்கை
தியாகராஜ நகர் : கோடை விடுமுறைக்கு பின்னர் பள்ளிகள் கடந்த 2ம் தேதி திறக்கப்பட்டன. நெல்லை மாவட்டத்தில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி இருந்தார். அதில் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
குறிப்பாக சாதிய அடையாளங்களை குறிக்கும் வகையில் பனியன் அணிந்து வருவதோ, சைக்கிள்களில் சாதிய அடையாள ஸ்டிக்கர்களை ஒட்டுவதோ கூடாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் ஆபத்தை விளைவிக்கக் கூடிய பொருட்களான அரிவாள், கத்தி மற்றும் கூர்மையான பொருட்களை எடுத்து வரக் கூடாது.
அது போன்ற பொருட்களை தினமும் கொண்டு வருகிறார்களா என்பதை பள்ளி நுழைவு வாயிலில் மாணவர்களின் புத்தகப் பைகளை சோதனை செய்ய வேண்டும் என்பது போன்ற பல்வேறு நியதிகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இதனை நெல்லை மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் கடைப்பிடிக்கத் தொடங்கி உள்ளன.
பாளையங்கோட்டையிலுள்ள பள்ளிகளில் நேற்று மாணவர்கள் வகுப்பிற்கு வந்தபோது உடற்கல்வி ஆசிரியர்கள் மாணவர்களின் புத்தக பைகளை பரிசோதனை செய்து அதன் பிறகே வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர்.
மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும் போது பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் புத்தகப் பைகளை பரிசோதனை செய்து அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைக்க வேண்டும் என முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்திருந்தார். இந்த நடைமுறை தொடர்ந்து தினமும் நடைமுறைபடுத்தப்படும் என கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
The post நெல்லையில் மாணவர்களின் புத்தகப் பைகள் பரிசோதனைக்கு பிறகு வகுப்பறைக்கு அனுமதி appeared first on Dinakaran.