
மத்திய அரசின் தொழிலாளர்-விவசாயி விரோத கொள்கைகளை எதிர்த்து மத்திய தொழிற்சங்கங்கள் இன்று (மே 20) அறிவித்திருந்த நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நாட்டில் தற்போது நிலவும் சூழல் காரணமாக ஜூலை 9ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று நாடு தழுவிய பெருந்திரள் ஆர்ப்பாட்டங்களை நடத்த அழைப்பு விடுத்திருந்தன.
நெல்லை
தொழிலாளர் விரோத, விவசாய விரோத மோடி அரசை கண்டித்து திருநெல்வேலியில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. நெல்லை வண்ணார்பேட்டை ரவுண்டானாவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எல்.பி.எப். மாநில அமைப்புச் செயலாளர் தர்மன் தலைமை வகித்தார்.
சிஐடியு நெல்லை மாவட்ட செயலாளர் முருகன் முன்னிலை வகித்தார். ஏ.ஐ.டி.யு.சி. மாவட்ட பொது செயலாளர் சடையப்பன் துவக்கி வைத்து பேசினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் எச்.எம்.எஸ். மாவட்டத் தலைவர் சுப்பிரமணியம், ஐ.என்.டி.யு.சி. மகாராஜன் சி.ஐ.டி.யு. சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் மோகன், மாவட்ட தலைவர் பீர்முகமதுஷா, ஜோதி, சரவணபெருமாள், ஏ.ஐ.டி.யு.சி. சார்பில் ரங்கன், உலகநாதன், ஐ.என்.டி.யு.சி. சார்பில் உமாபதிசிவன், மகாராஜன், ஏ.ஐ.சி.சி.டி.யு. சார்பில் சங்கரபாண்டியன், கணேசன், துர்க்கைமுத்து, தொ.மு.ச. சார்பில் முருகன், மகாவிஷ்ணு, ஐ.என்.டி.யு.சி. உமாபதிசிவன், எச்.எம்.எஸ். சுப்பிரமணியபிள்ளை உள்ளிட்டோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தின்போது விலைவாசி உயர்வை கட்டுப்படுத்து, தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு சட்டத் தொகுப்புகளை திரும்பப் பெறு, பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்காதே, காலிப் பணியிடங்களை நிரப்பிடு, கான்ட்ராக்ட் ஒப்பந்தம், அவுட்சோர்சிங் முறையை ஒழித்திடு, குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.26 ஆயிரம் நிர்ணயம் செய், குறைந்தபட்ச பென்சன் மாதம் ரூ.9 ஆயிரம் வழங்கிடு உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர். நிறைவாக தொ.மு.ச. சைபுதீன் நன்றி கூறினார்.
தூத்துக்குடி
தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்திருந்த 8 தொழிற்சங்கங்களான துறைமுக ஜனநாயக ஊழியர் சங்கம் சி.ஐ.டி.யு., போர்ட் மெரைனர்ஸ் அன்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் ஹெச்.எம்.எஸ்., போர்ட் யுனைடெட் ஒர்க்கர்ஸ் யூனியன் ஹெச்.எம்.எஸ்.(ஓர்க்கர்ஸ்), போர்ட் டிம்பிளாயீஸ் டிரேடு யூனியன், நேசனல் ஹார்பர் ஓர்க்கர்ஸ் யூனியன் ஐ.என்.டி.யு.சி., போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் ஏ.ஐ.டி.யு.சி., போர்ட் ஜெனரல் எஸ்டாப் யூனியன், போர்ட் அண்ணா டாக் அன்ட் டிரான்ஸ்போர்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் அஇஅதிமுக சங்கங்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்தன.
அதனடிப்படையில் இன்று தூத்துக்குடி துறைமுக நிர்வாக அலுவலகம் முன்பு துறைமுக ஆணையக்குழு உறுப்பினர்கள் பாலகிருஷ்ணன், துறைமுகம் சத்யா, தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு சார்பில் காசி, ஆறுமுகநயினார், மீனாட்சி சுந்தரேசன், எச்எம்எஸ் சார்பில் இஸ்மாயில், அமிர்தராஜ், ராமர், ஹெச்எம்எஸ்(ஓர்க்கர்ஸ்) சார்பில் ஜார்கென்னடி, கிளிங்டன், மோசஸ், ஜெயா, ஐஎன்டியுசி சார்பில் ராஜகோபாலன், பால்ராஜ், பெட்டு, ஐஎன்டியுசி சார்பில் கனகராஜ், முத்துமாடசாமி, ஏஐடியுசி சார்பில் தனசேகர், ஜெனரல் ஸ்டாப் யூனியன் ஆரோக்கியராஜ், பிரவீன், அண்ணா டாக் சார்பில் சண்முககுமாரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பங்கேற்றனர்.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள 4 தொழிலாளர் விரோத சட்டத் தொகுப்புகளை கைவிட வேண்டும். பெரிய துறைமுகங்கள் உள்ளிட்டு பொதுத்துறை நிறுவனங்களை கார்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் தேசிய பணமாக்கல் திட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும். அரசு துறைகளில் பணிசெய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு நிரந்தர தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வழங்கி நிரந்தரப்படுத்த வேண்டும். துறைமுக தொழிலாளர்கள், ஓய்வூதியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மருத்துவ சலுகைகளை பறிப்பதை கைவிட வேண்டும். ஊதிய ஒப்பந்தபடி ஓய்வூதியர்களுக்கு இரண்டாம் வழிமுறைபடி பென்சன் கணக்கிட வேண்டும். துறைமுகம் சாராத பணிகளில் ஈடுபடுவதை கைவிட்டு துறைமுகத்தின் கப்பல், சரக்கு போக்குவரத்தை மேம்படுத்த கவனம் செலுத்த வேண்டும். ஆகிய கோரிக்கைகள் வலியுறத்தப்பட்டன. அரசின் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை என்றால் ஜீலை 9 நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் முழுமையாக பங்கேற்பது என்றும் அறிவித்தனர்.