
நெல்லை,
நெல்லை அருகே உள்ள பொன்னாக்குடி பரணி நகரை சேர்ந்தவர் செல்வரத்தினம். இவருடைய மகன் ஆனந்த சுப்பிரமணியன். இவர் பொன்னாக்குடி மெயின் பஜாரில் பலசரக்கு கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று இரவு கடையை பூட்டி விட்டு வீட்டில் வந்து உறங்கினார். நேற்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து வௌியே வந்தார். அப்போது வீட்டின் மொட்டை மாடியில் ஆட்கள் நடமாட்டம் இருப்பது போல் சத்தம் கேட்டது.
உடனடியாக அவர் மாடிக்கு சென்று பார்த்தார். அப்போது அங்கு 3 பேர் பதுங்கி இருப்பதை கண்டார். அப்போது அவர்களில் 2 பேர் ஆனந்த சுப்பிரமணியனை தள்ளிவிட்டு தப்பி ஓடிவிட்டனர். 3-வதாக நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை மடக்கிப்பிடித்தார். பின்னர் இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார்.
போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இதில் அவர் வடமாநிலத்தை சேர்ந்தவர் என்பதும், தூத்துக்குடியில் வேலை செய்து வந்த அவர் நெல்லைக்கு நடந்து வந்ததாகவும் தெரிவித்தார். அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல் காணப்பட்டார். இதையடுத்து தப்பி ஓடிய 2 பேரை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.
அவர்களை பிடித்த பிறகே 3 பேரும் வீட்டின் மொட்டை மாடிக்கு எதற்காக வந்து பதுங்கினார்கள்? என்பது தெரியவரும். இதுகுறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.