21 முதல்நிலை காவலர்களுக்கு பதவி நிலை உயர்வுக்கான ஆணை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

5 hours ago 2

உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின்படி காவலர்களுக்கான நிலை உயர்த்துதலை மாற்றி 21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர் பதவி நிலை உயர்வுக்கான ஆணைகளை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், காவல்துறையில் உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின்படி தற்போதுள்ள 10+5+10 ஆண்டுகள் என்ற காவலர்களுக்கான நிலை உயர்த்துதலை மாற்றி 10+3+10 என்று நிர்ணயம் செய்து, மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட 10 முதல்நிலை காவலர்கள் மற்றும் காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களிலிருந்து 11 முதல் நிலை காவலர்கள், என மொத்தம் 21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவி நிலை உயர்வு ஆணைகளை வழங்கினார்.

2025-26ம் ஆண்டிற்கான காவல்துறை மானிய கோரிக்கையில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின், காவலர்கள் பதவி உயர்வில் ஏற்படும் காலதாமதத்தினை கருத்தில் கொண்டு, உறுதியான பணி முன்னேற்றத் திட்டத்தின் அடிப்படையில் தற்போது நடைமுறையில் உள்ள காவலர்களுக்கான நிலை உயர்த்துதல் (Upgradation) காலத்தை காவல் ஆளிநர்களை முதல்நிலை காவலர் / தலைமை காவலர் / சிறப்பு உதவி ஆய்வாளர் பதவி நிலை உயர்வு மேம்படுத்துவதற்கான கால அவகாசம் 10+5+10 ஆண்டுகள் என்பதை மாற்றி 10+3+10 ஆண்டுகளாக குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

அதன்படி, தற்போதுள்ள பதவி நிலை உயர்வுத் திட்டத்தை மாற்றி 10 ஆண்டுகள் பணிபுரிந்த இரண்டாம் நிலைக் காவலர்கள் முதல்நிலைக் காவலர்களாகவும், முதல் நிலை காவலர் பதவியிலிருந்து தலைமை காவலர் பதவி உயர்வு பெறுவதற்கான தகுதியுள்ள காலம் 5 ஆண்டு கால வரம்பை 3 ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டு, பின்னர் தலைமைக் காவலர்களாக 10 ஆண்டுகள் பணிபுரிந்த பின்னர் (மொத்தம் 23 ஆண்டுகள்) தலைமை காவலர் பதவியிலிருந்து சிறப்பு உதவி ஆய்வாளர்களாக பதவி நிலை உயர்வு பெற வழிவகை செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இப்புதிய பதவி நிலை உயர்வுத் திட்டத்தைச் செயல்படுத்த 28.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மேற்படி திருத்திய கொள்கை முடிவானது அரசாணை வெளியிடப்பட்ட 12.06.2025 நாளிலிருந்து நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த புதிய பதவி நிலை உயர்வுத் திட்டத்தின்படி 2011-ம் ஆண்டில் பணியில் சேர்ந்த 8,533 காவலர்களில், 12.06.2025 அன்று 3 ஆண்டுகள் முதல் நிலை காவலர்களாக பணிநிறைவு செய்து பணியாற்றுபவர்கள் 1.07.2025 முதல் உடனடி பயனடைந்து தலைமை காவலர்களாக பதவி நிலை உயர்வு பெறுவர்.

மேலும், 2026-ம் ஆண்டில், முதல் நிலை காவலர்களாக பணியாற்றும் 11,488 காவலர்கள் இப்புதிய பதவி நிலை உயர்வின்படி தலைமை காவலர்களாக பதவி நிலை உயர்வு பெற உள்ளனர். இந்த புதிய காவலர்களுக்கான நிலை உயர்த்துதல் ஆணையினை செயல்படுத்திடும் வகையில், முதல்-அமைச்சர் இன்றையதினம் ஒவ்வொரு மாநகர காவல் ஆணையரகத்திற்குட்பட்ட 10 முதல்நிலை காவலர்கள் மற்றும் ஒவ்வொரு காவல் சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் இருந்து 11 முதல் நிலை காவலர்களுக்கும், என மொத்தம் 21 முதல்நிலை காவலர்களுக்கு தலைமை காவலர்களாக பதவிநிலை உயர்வு ஆணை வழங்கி வாழ்த்தினார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article