பந்தலூர் : நீலகிரி மாவட்டம்,நெல்லியாளம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் கடந்த புதன்கிழமை நடைபெற்றது. மூன்றில் ஒரு பகுதி கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாததால் கூட்டத்தை தலைவர் சிவகாமி ஒத்திவைத்தார். இந்நிலையில் நேற்று நகர மன்ற கூட்டம் தலைவர் சிவகாமி தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் சுபஸ்ரீ முன்னிலை வகித்தார்.
மொத்தம் 20 கவுன்சிலர்களில் தலைவர் சிவகாமி, துணைத்தலைவர் நாகராசு மற்றும் திமுக கவுன்சிலர்கள் சேகர், முரளிதரன், நாகராஜ், பன்னீர்செல்வம், சாந்தி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ரமேஷ் உள்ளிட்ட 8 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
திமுக கவுன்சிலர்கள் நான்கு பேர், அதிமுக கவுன்சிலர் இருவர் உள்ளிட்ட 12 கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. இந்நிலையில் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் நகராட்சியில் பம்ப் ஆபரேட்டர்களாக பணி செய்பவர்களுக்கு கடந்த மூன்று மாதங்களாக அந்த தொகை வழங்கவில்லை. அதனால் குடிநீர் விநியோகம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
மழையால் பாதிப்புகள் ஏற்பட்டுள்ள பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், சாலை, நடைபாதை, தெருவிளக்குகள் பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை பணிகள் குறித்து பேசப்பட்டது. தொடர்ந்து, ஆணையாளர் பேசும்போது, நகராட்சி பகுதியில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகளை உடனடியாக செய்வதாக கூறினார்.
ஒரு வாரத்தில் நடைபெற்ற இரண்டு கூட்டங்களில் கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாதது குறித்து தலைவர் சிவகாமியிடம் கேட்டபோது, ‘‘திமுக கவுன்சிலர்கள் கலந்து கொள்ளாதது குறித்து மாவட்ட செயலாளருக்கு தெரிவித்துள்ளோம்’’ என்றார், திமுக மாவட்ட செயலாளர் கே.எம்.ராஜுவிடம் கேட்டபோது, ‘‘திமுக கவுன்சிலர்கள் நகர்மன்ற கூட்டத்தில் கலந்துகொள்ளாமல் இருப்பது குறித்து தலைமைக்கு தெரிவிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
நெல்லியாளம் நகர்மன்ற தலைவர் சிவகாமிக்கு எதிராக ஒப்பந்ததாரர் ஒருவர் கவுன்சிலர்களை நகர்மன்ற கூட்டத்தில் கலந்து கொள்ளாமல் தடுத்து வருவதாகவும் அதற்கு கூட்டத்தை புறக்கணிக்கும் கவுன்சிலர்கள் துணை போவதாகவும் பொதுமக்கள் மத்தியில் பரவலாக பேசப்படுகிறது.
The post நெல்லியாளம் நகர மன்ற கூட்டத்தில் 12 கவுன்சிலர்கள் ‘ஆப்சென்ட்’ appeared first on Dinakaran.