*ஆய்வு செய்த கோட்டாட்சியர் அதிரடி
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் அருகே சி.என்.பாளையம் செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக பள்ளம் எடுப்பதாக வந்த புகாரையடுத்து ஆய்வு செய்த கோட்டாட்சியர் சீல் வைக்க உத்தரவிட்டார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அடுத்த சிஎன்பாளையம் பகுதியில் விளங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி செம்மண் குவாரி நடத்தி வருகிறார். இந்த செம்மண் குவாரி மூலம் செம்மண்ணை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் வெட்டி எடுத்து லாரிகள் மூலம் எடுத்துச் சென்று வெளியூர்களில் விற்பனை செய்து வருகின்றனர். இந்த செம்மண் குவாரி 2004ல் அரசு மூலம் அனுமதி பெறப்பட்டு செயல்பட்டு வருகிறது.
மேலும் இந்த குவாரியில் அனுமதி பெறப்பட்ட அளவைவிட அதிக அளவிலான ஆழத்துக்கு பள்ளம் எடுப்பதாகவும், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாகவும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு மறைமுக தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் நேற்று கோட்டாட்சியர் அபிநயா செம்மண் குவாரி நடைபெறும் இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது குவாரிக்கான அனுமதி பெறப்பட்ட எல்லையில் அளவு கல் வைக்க வேண்டும்.
அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேற்பட்ட ஆழத்தில் பள்ளம் எடுக்கக் கூடாது. குவாரி நடத்த அரசு மூலம் பெறப்பட்ட உரிமைச் சான்றிதழுக்கான நகல் குவாரியில் இருக்க வேண்டும். அனுமதி பெற்ற இடம் இல்லாமல் மற்ற இடங்களில் மண் எடுக்கக்கூடாது. லாரியில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட செம்மண் ஏற்றிச் செல்லக்கூடாது. இதுபோன்ற எவ்வித அரசு விதிமுறைகளையும் பின்பற்றாமல் செயல்படுவதாக தெரிய வந்தது.
இதையடுத்து செம்மண் குவாரியை பூட்டி சீல் வைக்கவும், அப்போது குவாரியில் செம்மண் ஏற்றிக்கொண்டிருந்த இருந்த ஜே.சி.பி. இயந்திரம், 3 லாரிகளையும் பறிமுதல் செய்யவும் கோட்டாட்சியர் அபிநயா உத்தரவிட்டார். அப்போது நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், நடுவீரப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் முகிலரசு, முருகன், திருவந்திபுரம் வருவாய் ஆய்வாளர் வெங்கடேசன், நடுவீரப்பட்டு கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
The post நெல்லிக்குப்பம் அருகே சி.என். பாளையத்தில் அளவுக்கு அதிகமாக பள்ளம் எடுத்த செம்மண் குவாரிக்கு சீல் appeared first on Dinakaran.