பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரம்; 8 மாநிலங்களில் 15 இடங்களில் ரெய்டு: தேசிய புலனாய்வு முகமை அதிரடி

1 day ago 6

புதுடெல்லி: பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த வழக்கில் தொடர்புடைய நபர்களை அடையாளம் காணும் வகையில் எட்டு மாநிலங்களில் உள்ள 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை திடீர் சோதனைகளை நடத்தியது. டெல்லி, மகாராஷ்டிரா (மும்பை), அரியானா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், அசாம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய இடங்களில் பாகிஸ்தான் உளவு முகவர்களுடன் (பி.ஐ.ஓ) தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் தொடர்புடைய இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) திடீர் சோதனைகளை நடத்தியது.

இந்த சோதனைகளின்போது, மின்னணு சாதனங்கள், முக்கியமான நிதி ஆவணங்கள் மற்றும் பிற குற்றச்சாட்டுக்கு ஆதாரமான பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இவை, பாகிஸ்தான் நடத்தும் உளவு வலையமைப்பு மற்றும் இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாத சதி தொடர்பாக நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாக சோதனைக்கு உட்படுத்தப்பட்ட. ெமாத்தம் எட்டு மாநிலங்களில் உள்ள 15 இடங்களில் திடீர் சோதனைகள் நடத்தப்பட்டதில், பாகிஸ்தானுக்கு உளவு வேலை பார்த்த நபர்களின் முக்கிய விபரங்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் கடந்த 20ம் தேதி பதிவு செய்யப்பட்ட வழக்கின் பின்னணியில் இந்த சோதனைகள் நடந்துள்ளன. கடந்த 2023 முதல் தேசிய பாதுகாப்பு தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தான் உளவு முகவர்களுக்கு அளித்ததாக குற்றம்சாட்டப்பட்ட ஒரு நபர் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த வழக்கு விசாரணைகள் தொடர்கின்றன. கைது செய்யப்பட்ட அந்த நபர், இந்திய பாதுகாப்பு அமைப்புகள் தொடர்பான ரகசிய தகவல்களை பாகிஸ்தானுக்கு வழங்கியதற்கு ஈடாக இந்தியாவிற்குள் பல்வழிகளில் பணம் பெற்றதாக என்.ஐ.ஏ தெரிவித்தது. மேலும், கடந்த 26ம் தேதி அன்று, இதே உளவு வழக்கில் சி.ஆர்.பி.எஃப் ஊழியரான மோதி ராம் ஜாட் கைது செய்யப்பட்டார். இவர் 2023 முதல் பாகிஸ்தான் உளவு முகவர்களுக்கு ரகசிய தகவல்களை அளித்து, பல வழிகளில் பணம் பெற்றதாக என்.ஐ.ஏ கூறியது. இவர் வரும் 6ம் தேதி வரை பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தால் என்.ஐ.ஏ காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சொந்த வீட்டிற்கு வந்தது போல்…
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த காசிம் என்பவர், பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டார். ஒரு ஆண்டில் இரண்டு முறை பாகிஸ்தான் சென்று ஐ.எஸ்.ஐ உளவு அமைப்பிடம் உளவு பயிற்சி பெற்றதாக அதிகாரிகள் ெதரிவித்தனர். மேலும் ‘ரெஹ்பார்-எ-மேவாத்’ என்ற யூடியூப் சேனலில், பாகிஸ்தான் ஊடகவியலாளரிடம் நெருங்கி பழகி வந்துள்ளார். ஒரு வீடியோவில், பாகிஸ்தானுக்கு மீண்டும் வந்து செல்வது தனது சொந்த வீட்டிற்கு வந்தது போல் இருப்பதாகவும், பாகிஸ்தானில் கிடைக்கும் அன்பும் அரவணைப்பும் தன்னை மூன்று மாதங்களுக்கு பின்னர் மீண்டும் வர வைத்ததாகவும் காசிம் கூறினார். அதிகாரிகளின் கூற்றுப்படி, கடந்த 2024 ஆகஸ்ட் மற்றும் 2025 மார்ச் மாதங்களில் பாகிஸ்தானுக்கு சென்ற காசிம், அங்கு மொத்தம் 90 நாட்கள் தங்கி, ஐ.எஸ்.ஐ முகவர்களிடமிருந்து உளவு பயிற்சி பெற்றதாகவும், இந்திய சிம் கார்டுகளை பாகிஸ்தானுக்கு அனுப்பியதும் தெரியவந்தது. காசிமின் சகோதரர் ஹாசின், ஏற்கனவே ஐ.எஸ்.ஐ-க்கு உளவு பார்த்ததாக கைது செய்யப்பட்டார். ஹாசினின் விசா காலாவதியான பிறகு, காசிம் அவரது பணியை தொடர்ந்து தொடர்பை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது இருவரும் சிறையில் உள்ளனர்.

The post பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த விவகாரம்; 8 மாநிலங்களில் 15 இடங்களில் ரெய்டு: தேசிய புலனாய்வு முகமை அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article