
15 ஆண்டுகளுக்கு முன்னர், நாகப்பட்டினம் மாவட்டம், திருப்புகழூர் அக்னீஸ்வரர் கோவிலில் தொன்மை வாய்ந்த கண்ணப்பநாயனார் உலோகச்சிலை அடையாளம் தெரியாத நபர்களால் திருடப்பட்டது. இது குறித்து திட்டச்சேரி காவல் நிலையத்தில் 8.8.2010 அன்று வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவ்வழக்கு குறித்து விரிவான விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மேற்சொன்ன கண்ணப்பநாயனார் சிலையானது நெதர்லாந்தில், மாண்டரிச்லில் ஐரோப்பிய நுண்கலை கண்காட்சி 2025-ல் ஏலமிடப்பட உள்ளதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனடியாக அப்போதைய சிலை திருட்டு தடுப்புப்பிரிவு ஐ.ஜி. பிரவேஷ்குமார் ஏலத்தைத் தடுத்து நிறுத்திட நெதர்லாந்திலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கும், இந்திய தொல்லியல் துறைக்கும் 18.3.2025 அன்று அவசர மின்னஞ்சல் அனுப்பியுள்ளார். இந்த முயற்சியின் காரணமாக தொன்மை வாய்ந்த கண்ணப்பநாயனார் சிலை 23.3.2025 முதல் நெதர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சகம் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. இத்தொன்மை வாய்ந்த சிலையினை நெதர்லாந்து அரசிடமிருந்து இந்தியாவிற்கு கொண்டு வருவதற்குரிய சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
எனவே மேற்சொன்ன தொன்மை வாய்ந்த கண்ணப்பநாயனார் உலோகச்சிலை ஏலமிடப்பட இருந்தது தமிழ்நாடு சிலை திருட்டு தடுப்புப் பிரிவினரின் துரித முயற்சியால் தடுக்கப்பட்டது. தமிழ்நாடு டி.ஜி.பி. மற்றும் படைத்தலைவர் சங்கர்ஜிவால் மேற்சொன்ன நடவடிக்கைக்காக, சிலைதிருட்டு தடுப்புப் பிரிவின் ஏ.டி.ஜி.பி. கல்பனாநாயக், முன்னாள் ஐ.ஜி. பிரவேஷ்குமார், எஸ்.பி. சிவகுமார் மற்றும் திருச்சி மத்திய மண்டலம் ஏ.டி.எஸ்.பி. பாலமுருகன், கும்பகோணம் சரக இன்ஸ்பெக்டர் கவிதா ஆகியோரை பாராட்டினார்.