நுங்கம்பாக்கம் தனியார் பாரில் தகராறு அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார் உள்பட 6 பேர் கைது: ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, கட்டப்பஞ்சாயத்து செய்ததால் போலீஸ் நடவடிக்கை

20 hours ago 4

சென்னை: நுங்கம்பாக்கம் தனியார் பாரில் ஏற்பட்ட தகராறில் ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, போலீசாரிடம் தகராறில் ஈடுபட்டதாக அதிமுக நிர்வாகி அஜய் வாண்டியார், ராமநாதபுரம் பிரபல ரவுடி சுனாமி சேதுபதி உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை திருவான்மியூர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. கிழக்கு கடற்கரை சாலை கானத்தூரில் தூண்டில் என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார். இவர், கடந்த 22ம் தேதி நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் பாரில் நண்பர்களுடன் மது அருந்தி உள்ளார். அப்போது பக்கத்து இருக்கையில் வெங்கட்குமார் என்பவர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.

ராஜா, போதையில் இருந்த செல்வாவை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் வெங்கட்குமார் மது குடித்துக் கொண்டிருந்த கண்ணாடி குடுவையை எடுத்து ராஜா மீது தாக்கி உள்ளார். இதில் ராஜாவுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அப்போது ராஜாவும், வெங்கட்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. இரு தரப்பும் பாரிலேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர்.

பின்னர் தனியார் பார் மேலாளர் வெங்கட் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ராஜா மற்றும் வெங்கட்குமார் ஆகியோர் பாரை அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டனர் என்று புகார் அளித்துள்ளார். புகாரின்படி போலீசார் இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். இதற்கிடையே ஓட்டல் உரிமையாளர் ராஜாவுக்கு ஆதரவாக நடிகர் கருணாஸ் கட்சியின் முன்னாள் இளைஞர் அணி செயலாளரும் தற்போது அதிமுக நிர்வாகியான அஜய் வாண்டையர் மற்றும் அவரது நண்பரான சுனாமி சேதுபதி ஆகியோர் ராஜா மீது வழக்கு பதிவு செய்ததை நீக்க கோரி நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு வந்து கட்டப்பஞ்சாயத்து செய்ததாக கூறப்படுகிறது.

மேலும், வழக்குப்பதிவு செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இன்ஸ்பெக்டரை பணி செய்யவிடாமல் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் சம்பவத்தன்று பாரில் தகராறில் ஈடுபட்ட ராஜாவுக்கு ஆதரவாக ரவுடிகள் சிலர் பாரில் வெங்கட்குமார் தரப்பினரை தாக்கியதாகவும், அந்த ரவுடிகளுக்கு அஜய் வாண்டையார் அடைக்கலம் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் உயர் அதிகாரிகள் கவனத்திற்கு சென்றது.

உடனே உயர் அதிகாரிகள் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்தில் யார் ஈடுபட்டாலும் அவர்கள் மீது எந்தவித தயவு தாட்சண்யமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து நுங்கம்பாக்கம் போலீசார் அஜய் வாண்டையார், ராமநாதபுரம் ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி சுனாமி சேதுபதி, கணேஷ்குமார், அதிமுக தொழில்நுட்ப பிரிவு நிர்வாகி பிரசாத், ஜாகிராம், நாகேந்திர சேதுபதி, அஜய் ரோகன் ஆகியோர் மீது தனியாக வழக்கு பதிவு செய்தனர்.

போலீசார் தங்கள் மீது வழக்கு பதிவு செய்ததை தெரிந்து கொண்ட அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார் தனது நண்பரான சுனாமி சேதுபதியுடன் தலைமறைவாகிவிட்டார். அதை தொடர்ந்து அவர்களை கைது செய்ய நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் தேனியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து தேனி விரைந்து சென்ற உதவி கமிஷனர் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 27ம் தேதி அதிரடியாக அஜய் வாண்டையார், பிரபல ரவுடி சுனாமி சேதுபதி ஆகியோரை கைது செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் சென்னையில் பதுங்கி இருந்த கணேஷ்குமார், பிரசாத், ஜானகிராம், நாகேந்திர சேதுபதி, அஜய் ரோகன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள ஓட்டல் உரிமையாளர் ராஜா, பிரேம்குமார், தீபக், தனசேகர் ஆகியோரை தனிப்படையினர் தொடர்ந்து தேடி வருகின்றனர். தனியார் பாரில் ஏற்பட்ட தகராறில் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டதாக நடிகர் கருணாஸ் கட்சியின் முன்னாள் மாநில நிர்வாகி ஒருவரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

* அஜய் வாண்டையாருக்கு புதிதல்ல
கடந்த 2020ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் நடிகர் கருணாஸ் தனது கட்சி நிர்வாகிகளுக்கு எம்ஆர்சி நகரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பார்ட்டி வைத்தார். அப்போது அதே ஓட்டலில் மது அருந்திக் கொண்டிருந்த பரணிதரன் என்பவருக்கும் நடிகர் கருணாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அதை தொடர்ந்து நடிகர் கருணாஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். அதன் பிறகு அப்பொழுது நடிகர் கருணாசின் கட்சியில் நிர்வாகியாக இருந்த அஜய் வாண்டையார் உள்பட 6 பேர் பரணிதரனை கடுமையாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.

இதுகுறித்து பரணிதரன் பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அப்போது அதிமுக கூட்டணியில் நடிகர் கருணாசின் முக்குலத்தோர் புலிப்படை இருந்ததால் அவர் நடிகர் கருணாஸ் மீது வழக்கு பதிவு செய்யாமல் தாக்குதல் நடத்திய அஜய் வாண்டையார் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு மட்டும் செய்யப்பட்டது. ஆனால் கைது செய்யப்படவில்லை. இருந்தாலும், நட்சத்திர ஓட்டலில் பரணிதரனை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் அப்போது வைரலாகியது குறிப்பிடத்தக்கது.

* கூலிப்படையினருக்கு அடைக்கலம்
நடிகர் கருணாஸ் கட்சியின் வக்கீல் பிரிவு தலைவர்தான், சாலிகிராமத்தில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் கருணாசின் டிரைவராக இருந்தவரால் படுகொலை செய்யப்பட்டார். தற்போது ராஜா இசிஆரில் நடத்தி வரும் உணவகத்தில் எப்போதும் ரவுடிகளும், கூலிப்படையினரும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது.

தென் மாவட்டங்களைச் சேர்ந்த கூலிப்படையினருக்கு ராஜா முழுமையாக அடைக்கலம் கொடுத்து வந்துள்ளார். இதற்காக தனது கடையில் தனியாக அறை ஒதுக்கியுள்ளதும் தெரியவந்துள்ளது. இதனால், ராஜாவுக்கு தென் மாவட்டங்களில் நடந்த கொலையில் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post நுங்கம்பாக்கம் தனியார் பாரில் தகராறு அதிமுக நிர்வாகி அஜய் வாண்டையார் உள்பட 6 பேர் கைது: ரவுடிகளுக்கு அடைக்கலம் கொடுத்து, கட்டப்பஞ்சாயத்து செய்ததால் போலீஸ் நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article