நீலகிரியில் 2 நாட்களாக கன மழை; விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

2 months ago 9


ஊட்டி: நீலகிரியில் நேற்று முன்தினம் மற்றும் நேற்றும் மழை கொட்டியதால் விவசாயிள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டு தோறும் கோடை காலத்தில் வறட்சி ஏற்பட்டு பொதுமக்கள் மட்டுமின்றி, விவசாயிகள் மற்றும் விலங்குகளும் பாதிப்பது வாடிக்கையாக உள்ளது. அதே சமயம் சில சமயங்களில் மார்ச் மற்றும் மே மாதங்களில் சில நாட்கள் மழை பெய்யும். இந்த மழையால், குடிநீர் ஆதாரங்களில் தண்ணீர் இருப்பு அதிகரிக்கும். அதேபோல், விவசாயம் செய்ய போதுமான தண்ணீர் கிடைக்கும். அனைத்து பகுதிகளிலும் வனங்களிலும் பசுமை திரும்பும். இந்நிலையில், கடந்த நான்கு மாதங்களுக்கு பின் நேற்று முன்தினம் நீலகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ஊட்டி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கன மழை பெய்தது.

அதேபோல், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இடியுடன் கூடிய கன மழை பல மணி நேரம் பெய்தது. இந்த மழையால், சாலைகளில் இருந்த புழுதிகள் அனைத்தும் மழையில் அடித்துச் செல்லப்பட்டன. மேலும், தாழ்வான பகுதிகளிலும் மழை நீர் தேங்கியது. நேற்றும் ஊட்டி புறநகர் பகுதிகளில் கன மழை பெய்தது. மேலும், மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் மழை பெய்தது. தொடர்ந்து, ஓரிரு நாட்கள் மழை பெய்தால், விவசாய நிலங்களில் உள்ள அனைத்து குளங்கள், கிணறுகள் மற்றும் குட்டைகளில் தண்ணீர் அளவு உயரும். இதனால், கோடையில் விவசாயம் பாதிக்காது.

வனங்களில் காட்டுத் தீ ஏற்பட வாய்ப்பில்லை. மேலும், குடிநீர் ஆதாரங்களிலும் தண்ணீர் அளவு உயரும். கடந்த ஒரு மாத காலமாக நீலகியிலும் வெயில் வாட்டி வந்தது. இந்நிலையில், இரு நாட்களாக மாவட்டத்தில் மழை பெய்ததால், சற்று சூடு தணிந்துள்ளது. மேலும், பகல் நேரங்களிலும் வெயிலின் தாக்கமும் சற்று குறைந்து காணப்படுகிறது. மழை பெய்து வரும் நிலையில், கோடையில் தண்ணீர் தட்டுப்பாடு குறையும் என்பதால், பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

The post நீலகிரியில் 2 நாட்களாக கன மழை; விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Read Entire Article