
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள மேல் கொட்டரகண்டி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 60). இவர் ராணுவத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி பிரிந்து சென்று விட்டதால், தனியாக வசித்து வந்தார். ராஜ்குமார், நீலகிரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்தார். அவர் கடந்த சில ஆண்டுகளாக கொட்டரகண்டியில் உள்ள வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று அவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் மஞ்சூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதன் பேரில் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, ராஜ்குமார் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். உடல் அழுகிய நிலையில் காணப்பட்டதால், அவர் இறந்து 4 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கக்கூடும் என்று தெரிகிறது. இயற்கை மரணமா அல்லது தற்கொலையா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.