சத்தியமங்கலம், ஜூன் 18: பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் பாசன வசதி வருகிறது. அணையின் நீர்பிடிப்பு பகுதிகளான வட கேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதியில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து அதிகரிப்பால் கடந்த 2 நாட்களில் மட்டும் பவானிசாகர் அணை நீர்மட்டம் 3 அடி உயர்ந்துள்ளது.
நேற்று மாலை 6 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து 15278 கன அடியாக இருந்தது. அணை நீர்மட்டம் 86.77 அடியாகவும், நீர் இருப்பு 19.5 டிஎம்சி ஆகவும் உள்ளது. பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் 450 கன அடி தண்ணீரும் கீழ்பவானி வாய்க்காலில் 5 கன அடி தண்ணீரும் வெளியேற்றப்படுகிறது. அணை நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் பாசனப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .
The post நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்வதால் பவானிசாகர் அணை 2 நாட்களில் 3 அடி உயர்வு appeared first on Dinakaran.