
சென்னை,
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்திருப்பதாவது:-
சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசரும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் முன்னாள் தலைவருமான நீதிபதி எம்.எஸ். ஜனார்த்தனன் காலமானார் என்ற செய்தியறிந்து பேரதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்த நீதியரசர் ஜனார்த்தனன் கடுமையான உழைப்பால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்ந்தவர். 1988-ஆம் ஆண்டு முதல் 1998ஆம் ஆண்டு வரை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வரலாற்று சிறப்புமிக்க பல தீர்ப்புகளை வழங்கியவர்.
தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக 2006-ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட அவர், 2015-ஆம் ஆண்டு வரை அப்பொறுப்பில் நீடித்தார். இவரது பரிந்துரையின் அடிப்படையில் தான் தமிழகத்தில் இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு, கிறித்தவர்கள் இட ஒதுக்கீடு, அருந்ததியர் இட ஒதுக்கீடு ஆகியவை நடைமுறைப்படுத்தப்பட்டன. வன்னியர்களுக்கான 10.50% இட ஒதுக்கீட்டை பரிந்துரைத்தவரும் இவர் தான். பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் தலைவராக ஒருவர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதற்கு முன்னுதாரணமாக திகழ்ந்தவர். சமூகநீதி வரலாற்றில் தமது முத்திரையை மிகவும் ஆழமாக பதித்தவர் இவர். நீதியரசர் ஜனார்த்தனத்தின் மறைவு சமூகநீதித்துறைக்கு ஏற்பட்ட ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும்.
நீதியரசர் ஜனார்த்தனத்தை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், நீதித்துறையினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். சமூகநீதிக்கு அவர் செய்த பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவரது திருவுடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகளை நடத்த தமிழ்நாடு அரசு ஆணையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.