நீட் முதுநிலை தேர்வை ஒரேகட்டமாகதான் நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

1 day ago 5

புதுடெல்லி: நீட் முதுநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு ஜூன் 15ம் தேதி நாடு முழுவதும் நடைபெறஉள்ளது. இத்தேர்வு காலை 9 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை முதற்கட்டமாகவும், அதேநாளில் மாலை 3.30 மணி முதல் முதல் இரவு 7 மணி வரை இரண்டாம் கட்டமாகவும் நடைபெறவுள்ளது. ஆனால் 2024ம் ஆண்டில் இதேபோன்று தேர்வு நடத்தப்பட்டதில் முதற்கட்ட தேர்வு எளிமையாக இருந்ததாகவும், இரண்டாம் கட்ட தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தேர்வு எழுதிய மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த பிரச்னைகளை அடிப்படையாக கொண்டு நடப்பாண்டிலும் இரண்டு கட்டங்களாக நீட் முதுநிலை நுழைவு தேர்வை ஒன்றிய அரசு நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. மேற்கண்ட வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, முதுநிலை நீட் தேர்வு இரண்டு கட்டங்களாக ஏன் நடத்தப்படுகிறது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த மருத்துவ தேர்வுகளுக்கான தேசிய வாரியம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், “முதுநிலை நீட் தேர்வு விவகாரத்தில் முறைகேடுகளை தவிர்க்கவே இரண்டு கட்டங்களாக தேர்வு நடத்தப்படுகிறது. மேலும் ஆண்டுதோறும் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகின்றது. அவற்றை அடிப்படையாகக் கொண்டே இதுபோன்ற முடிவு எடுக்கப்பட்டது. நடப்பாண்டு தேர்வு ஜூன் 15ம் தேதி நடத்தப்பட உள்ளது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்து முடித்தாகி விட்டது. இந்த சூழலில் தற்போது தடை விதிக்கப்பட்டால் பாதிப்பு ஏற்படும்” என்று தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “நீட் முதுகலை தேர்வு கைப்பட எழுதும் வகையில் ஏன் நடத்தப்படுவதில்லை. ஒரேகட்டமாக நடத்த ஏன் வழிமுறை காணக்கூடாது. உடனே அதற்கான நடவடிக்கைகளை எடுங்கள். ஏனெனில் இதுபோன்ற செயல்பாடுகளால் தேர்வு எழுதும் மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாகிறார்கள். அவர்களுக்கு இந்த இரண்டு கட்ட தேர்வு முறை என்பது கூடுதல் பிரச்சனையை உருவாக்கும்” என்று தெரிவித்தனர்.

தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “நீட் முதுநிலை தேர்வு ஒரேகட்டமாகதான் நடத்தப்பட வேண்டும். அதற்கான கூடுதல் தேர்வு மையங்களை உடனடியாக கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். ஒருவேளை ஜூன் 15ம் தேதிக்குள் கூடுதல் தேர்வு மையங்களை கண்டறிய முடியாவிட்டால், மருத்துவ தேர்வுகளுக்கான தேசிய வாரியம் தரப்பு மீண்டும் நீதி மன்றத்தை நாடலாம்” என்று உத்தரவிட்டனர்.

The post நீட் முதுநிலை தேர்வை ஒரேகட்டமாகதான் நடத்த வேண்டும்: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.

Read Entire Article