
ஜெருசலேம்,
ஹமாஸ் ஆயுதக்குழுவினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் காசா முனையில் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. இஸ்ரேல் ராணுவம் நடத்தி வரும் தாக்குதல்களால் காசா முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. இதுவரை சுமார் 54 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீன் மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீட்டையும், வாழ்வாதாரத்தையும் இழந்துள்ளனர்.
காசா மீதான தாக்குதலை இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்று பல்வேறு சர்வதேச நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. இருப்பினும் ஹமாஸ் அமைப்பினர் வசம் இருக்கும் இஸ்ரேலிய பிணைக் கைதிகள் அனைவரையும் மீட்டு, ஹமாஸ் அமைப்பை முழுமையாக அழிக்கும் வரை மோதல் முடிவுக்கு வராது என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சூளுரைத்துள்ளார்.
இதனிடையே, ஹமாஸ் அமைப்பினருக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் சர்வதேச நாடுகளில் இருந்து காசாவிற்கு அனுப்பப்படும் மனிதாபிமான உதவிகளை சுமார் 3 மாதங்களுக்கு இஸ்ரேல் நிறுத்தி வைத்தது. இஸ்ரேலின் நடவடிக்கையால் காசாவில் மிக மோசமான பஞ்சம் ஏற்படும் அபாயம் உருவாகும் என சமூக ஆர்வலர்கள் எச்சரித்த நிலையில், அடிப்படை உதவிகளை மட்டும் காசாவிற்கு அனுப்பி வைக்க இஸ்ரேல் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த சூழலில், சுவீடன் நாட்டை சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க், கடல்வழியாக நிவாரண பொருட்கள் அடங்கிய கப்பலில் காசாவுக்கு செல்ல உள்ளார். இந்த கப்பலில் அவருடன் சேர்ந்து பாலஸ்தீன வம்சாவளியை சேர்ந்த ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர் ரிமா ஹாசன் உள்பட மொத்தம் 12 சமூக ஆர்வலர்கள் பயணம் செய்கின்றனர்.
இந்த கப்பல் கடந்த ஞாயிற்றுக்கிழமை இத்தாலியில் இருந்து புறப்பட்டது. 'மேட்லீன்' என பெயரிடப்பட்ட இந்த கப்பல் 'பிரீடம் புளோட்டிலா கூட்டணி' என்ற அமைப்பால் அனுப்பப்பட்டுள்ளது. காசாவின் கடல் எல்லையில் இஸ்ரேல் ராணுவம் அமைத்துள்ள தடுப்பு காவலை மீறி காசாவிற்குள் நுழைய கிரேட்டா தன்பெர்க் மற்றும் குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இந்த கப்பல் தற்போது எகிப்து சென்றடைந்துள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
முன்னதாக ஹமாஸ் அமைப்பினர் கடல் வழியாக ஆயுதக் கடத்தலில் ஈடுபட வாய்ப்புள்ளதாக கூறி இஸ்ரேல் ராணுவம் காசாவின் கடல் எல்லையை மூடியது. அங்கு இஸ்ரேல் கடற்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏற்கனவே கடந்த மாதம் 'பிரீடம் புளோட்டிலா கூட்டணி' அனுப்பிய நிவாரண கப்பல் மால்டாவின் சர்வதேச கடல் எல்லைக்குள் நுழைந்தபோது, அந்த கப்பல் மீது இஸ்ரேல் ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியது.
இந்த நிலையில், தற்போது கிரேட்டா தன்பெர்க் உள்ளிட்டோர் காசாவிற்கு கடல்வழியாக பயணம் செய்ய முயற்சி செய்வது குறித்து இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தங்கள் கடற்படையின் முற்றுகையை மீறி காசாவிற்குள் யாரும் நுழைய இஸ்ரேல் அனுமதிக்காது என அந்நாட்டின் பாதுகாப்புத்துறை மந்திரி இஸ்ரேல் காட்ஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.